ஒன்பதாந் திருமொழி
(1028)
தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்,
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்,
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா.,
நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே.
(1029)
மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,
நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
(1030)
கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,
என்றேனு மிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,
குன்றேய் மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா!,
அன்றே வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
(1031)
குலந்தா னெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்,
நலந்தா னொன்றுமிலேன் நல்லதோரறம் செய்துமிலேன்,
நிலம் தோய்நீள்முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா.,
அலந் தேன்வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.
(1032)
எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்,
துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்,
செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை, என்
அப்பா! வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
(1033)
மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்,
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்,
விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா,
அண்ணா! வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
(1034)
தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,
பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,
கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா!,
அரிய!. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
(1035)
நோற்றேன் பல்பிறவி உன்னைக்காண்ப தோராசையினால்,
ஏற்றேனிப் பிறப்பே யிடருற்றனனெம் பெருமான்!,
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா!,
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.
(1036)
பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்,
மற்றேலொன்றறியேன் மாயனே! எங்கள்மாதவனே!,
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா!,
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
(1037)
கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை,
விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை,
திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன்,
பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே
.
