(1032)

(1032)

எப்பாவம்பலவும் இவையே செய்திளைத்தொழிந்தேன் * 

துப்பா நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன் * 

செப்பார் திண்வரைசூழ் திருவேங்கடமாமலை* என் 

அப்பா வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.

பதவுரை

செப்பு ஆர் திண் வரை சூழ்

அரணாகப் போரும்படியான திண்ணிய மலைகளாலே சூழப்பட்ட

திரு வேங்கடம் மா மலை

திருமலையிலே எழுந்தருளியிரா நின்ற

என் அப்பா

என் அப்பனே

துப்பா

ஸர்வசக்தனே!

எப்பாவம் பலவும் இவையே செய்து

பலவகைப்பட்ட பாவங்களையே பண்ணி

இளைத்தொழிந்தேன்

துக்கப்பட்டவனாய்

நின் அடியே

உனது திருவடிகளை

தொடர்ந்து

அநுஸரித்து

ஏத்தவும்

துதிக்கவும்

கிற்கின்றிலேன்

சக்தியற்றவனான நான் வந்து அடைந்தேன்-.

அடியேனை ஆள் கொண்டருள்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

#1032

எப் பாவம் பலவும் இவையே செய்து, இளைத்தொழிந்தேன்;

துப்பா! நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்;

செப்ப ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்

அப்பா!; வந்து அடைந்தேன்  அடியேனை ஆட்கொண்டருளே. [1-9-5].

       

        ***- அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் எப்படிப்பட்டவையாயினும் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன். பிறகு அப்பாவங்களுக்கு நேரக்கூடிய பலன்களைக் கேள்விப்பட்டு என்ன செய்தோம்! என்ன செய்தோம்!!’ என்று வருத்தத்தால் குன்றிப் போனேன்.  கைசலியாமல் பாவங்களைச் செய்ததனாலுண்டான இளைப்பு எப்படிப்பட்டதென்றால், நாலெழுத்துச் சொல்லி உன்னைத் துதிக்கவும் முடியாத அசக்தியாயிற்றுக்காண். ஆயினும் உன்னடிக்கீழ் வந்து புகுந்தேனாகையால் அடியேனை அடிமை கொண்டருளவேணும்.

        துப்பன்-ரக்ஷிப்பதற்குப் பாங்கான சக்தியையுடையவன். செப்பார் திண்வரை சூழ் = ஆபரணம் முதலியவற்றை ரக்ஷிக்கும்படியான ஸம்புடத்திற்குச் செப்பு என்று பேராகையாலே, லக்ஷிதலக்ஷணையாலே, “செப்பு ஆர்-அரணாகப் போரும்படியான” என்றுரைக்கக் குறையில்லை.

English Translation

 

For ever performing sinful acts, I became weak arid sad. O Deft one! Nor have I chanted the glories of your feet. Copper-like strong mountains rise around you r abode, my father! O  Lord of Tiruvenkatam, I have come to you. Pray take me into your service!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top