(556)
வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
(557)
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்,
(558)
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
(559)
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
(560)
கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்
(561)
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்
(562)
வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல்ப டுத்துப்ப ரிதிவைத்து
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்
(563)
இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
செம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றி
அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான்
(564)
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
(565)
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
(566)
ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
வேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே
