ஆறாந் திருமொழி
(1598)
சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே.
(1599)
கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும்,
மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு,
ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே
(1600)
உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை,
விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,
அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்
உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.
(1601)
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று
பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,
அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றானை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே.
(1602)
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை,
வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை,
செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே.
(1603)
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்,
உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்
கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்
கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே!
(1604)
திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா,
உருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை,
அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே!
(1605)
நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன்
முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும்,
அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே.
(1606)
பேரா னைக்குடந்தைப் பெருமானை,இலங்கொளிசேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,
ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே.
(1607)
திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்
கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும்,
முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே.
