(152)
வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்குஎத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்
(153)
கன்றுக ளோடச் செவியில் கட்டெறும் புபிடித் திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீபிறந் ததிரு வோணம்
இன்று நீநீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்
(154)
பேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நல்லாதுஎன் னெஞ்சம்
ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான்முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ்மணி வண்ணா மஞ்சன மாடநீ வாராய்.
(155)
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.
(156)
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.
(157)
எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.
(158)
கறந்தநற் பாலும் தயிரும் கடைந்துஉறி மேல்வைத்த வெண்ணெய்
பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே
சிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே
மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.
(159)
கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து
பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்
நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.
(160)
பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்க மேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.
(161)
கார்மலி மேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை
பார்மலி தொல்புது வைக்கோன் பட்டர் பிரான்சொன்ன பாடல்
சீர்மல செந்தமிழ் வல்லார் தீவினை யாது மிலரே.
