(637)
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
(638)
அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
(639)
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
(640)
கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் றன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
(641)
மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
(642)
தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே
(643)
பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
(644)
வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
(645)
நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் றன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளு முடன்மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
(646)
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே
