ஐந்தாந் திருமொழி
(54)
தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தி னை இள மாமதீ
நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.
(55)
என்சிறுக் குட்டன் எனக்கோ ரின்னமுது எம்பிரான்
தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா.
(56)
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா.
(57)
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்காண்
தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலட னல்லையேல் வாகண்டாய்.
(58)
அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
புழையில வாகாதே நின்செவி புகர்மாமதீ!
(59)
தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.
(60)
பாலக னென்றுபரிபவம் செய்யேல் பண்டொருநாள்
ஆலி னிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மாமதீ மகிழ்ந் தோடிவா.
(61)
சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண்
நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
(62)
தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்
ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்
வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.
(63)
மைத்தடங் கண்ணி யசோதை தன்மக னுக்குஇவை
ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனை யும்சொல்ல வல்ல வர்க்குஇட ரில்லையே
