நான்காந் திருமொழி
(44)
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!
(45)
உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல்அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!
(46)
என்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!
(47)
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!
(48)
எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுஉவ னாய்நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!
(49)
ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும்
சாதிப் பவளமும்சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!
(50)
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே! அழேல்அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!
(51)
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ
அச்சுத னுக்கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராய ணாஅழேல் தாலேலோ!!
(52)
மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்குஅஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள்
அய்யா அழேல்அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!
(53)
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே.
