(244)
சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேல்தோன் றிப்பூ
கோலப் பணைக்கச் சும்கூ றையுடையும் குளிர்முத் தின்கோ டாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோமற் றாரு மில்லை.
(245)
கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்ன ரங்கம்
மன்னிய சீர்மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வு கந்து
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்ப டுத்தேன்
என்னின் மனம்வலி யாள்ஒரு பெண்இல்லை என்குட்ட னேமுத் தம்தா.
(246)
காடுக ளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோ டல்பூச்
சூடிவ ருகின்ற தாமோ தராகற்றுத் தூளிகாண் உன்னு டம்பு
பேடை மயிற்சாயல் பின்னை மணாளா நீராட் டமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்.
(247)
கடியார் பொழிலணி வேங்கட வாகரும் போரே றேநீ யுகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே
கடியவெங் கானிடைக் கன்றின்பின் போன சிறுக்குட் டச்செங் கமல
அடியும் வெதும்பிஉன் கண்கள் சிவந்தாய் அசைந்திட் டாய்நீ எம்பிரான்.
(248)
பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன் னியத்தை வாய்வைத்த போரே றேஎன்
சிற்றாயர் சிங்கமே சீதைம ணாளா சிறுக்குட்டச் செங்கண் மாலே
சிற்றாடை யும்சிறுப் பத்திர மும்இவை கட்டிலின் மேல்வைத் துப்போய்
கற்றாய ரோடுநீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்.
(249)
அஞ்சுட ராழிஉன் கையகத் தேந்தும் அழகாநீ பொய்கை புக்கு
நஞ்சுமிழ் நாகத்தி னோடு பிணங்கவும் நான்உயிர் வாழ்ந்தி ருந்தேன்
என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோ ரச்ச மில்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பன வேசெய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்.
(250)
பன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற்கடல் வண்ணா உன்மேல்
கன்றி னுருவாகி மேய்புலத் தேவந்த கள்ள அசுரன் தன்னை
சென்று பிடித்துச் சிறுக்கைக ளாலே விளங்கா யெறிந்தாய் போலும்
என்றும்என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனமா வார்களே.
(251)
கேட்டறி யாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்தி ரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்
ஊட்ட முதலிலேன் உன்தன் னைக்கொண்டு ஒருபோ தும்எனக் கரிது
வாட்டமி லாப்புகழ் வாசுதே வாஉன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்.
(252)
திண்ணார் வெண்சங் குடையாய் திருநாள் திருவோண மின்றேழு நாள்முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப் பல்லாண்டு கூறு வித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்த ரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணாநீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலம்செய் திங்கேயிரு.
(253)
புற்றர வல்குல் அசோதைநல் லாய்ச்சி தன்புத் திரன்கோ விந்தனை
கற்றினம் மேய்த்து வரக்கண் டுகந்துஅவள் கற்பித்த மாற்ற மெல்லாம்
செற்ற மிலாதவர் வாழ்தரு தென்புது வைவிட்டு சித்தன் சொல்
கற்றிவை பாடவல் லார்கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே.
