ஆறாந் திருமொழி
(3286)
தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம்,
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த, மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே.
(3287)
திசைக்கின்ற தேயிவள் நோயிது மிக்க பெருந்தெய்வம்,
இசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது,
திசைப்பின்றி யேசங்கு சக்கர மென்றிவள் கேட்க,நீர்
இசைக்கிற்றி ராகில்நன் றேயில் பெறுமிது காண்மினே.
(3288)
இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு விச்சிசொற் கொண்டு,நீர்
எதுவானும் செய்தங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின்,
மதுவார் துழாய்முடி மாயப் பிரான்கழல் வாழ்த்தினால்,
அதுவே யிவளுற்ற நோய்க்கும் அருமருந்தாகுமே
(3289)
மருந்தாகும் என்றங்கோர் மாய வலவைசொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத் தென்பயன்?
ஒருங்காக வேயுல கேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட,
பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே.
(3290)
இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ,
குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்,
கவளக் கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால்,
தவளப் பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே.
(3291)
தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர்,
பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால்,
மணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு,
அணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே
(3292)
அணங்குக் கருமருந் தென்றங் கோர் ஆடும்கள் ளும்பராய்
சுணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே.
(3293)
வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப்
பாதம் பணிந்து,இவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்
ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்,
கீத முழவிட்டு நீர்அணங் காடுதல் கீழ்மையே.
(3294)
கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ்,
நாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன்,
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து,
ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே.
(3295)
உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்,
நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி
மன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே.
(3296)
தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த
வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன், சொல்
வழுவாத ஆயிரத் துள்ளிவை பத்து வெறிகளும்,
தொழுதாடிப் பாடவல் லார்துக்க சீலம் இலர்களே.
