(2402)
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் – இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு.
(2403)
அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
மீனா யுயிரளிக்கும் வித்து.
(2404)
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, – மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.
(2405)
நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம்
நான்கும் இகழ்ந்தா யிருவரையும் வீயப் – புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்
மனப்போர் முடிக்கும் வகை.
(2406)
வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்
வகையால் வருவதொன் றுண்டே, வகையால்
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்
வயிர வழக்கொழித்தாய் மற்று.
(2407)
மற்றுத் தொழுவா ரொருவ ரையும் யானின்மை,
கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்
கண்டுகொள் கிற்கு மாறு.
(2408)
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள் – நீறாடி
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
யான்காண வல்லேற் கிது.
(2409)
இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, – இதுவிலங்கை
தானொடுங்க வில்நுடங்கத் தண்தா ரிராவணனை,
ஊனொடுங்க எய்தான் உகப்பு.
(2410)
உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில், – மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன்.
(2411)
அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல்.