(2409)

(2409)

இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,

இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, – இதுவிலங்கை

தானொடுங்க வில்நுடங்கத் தண்தா ரிராவணனை,

ஊனொடுங்க எய்தான் உகப்பு.

பதவுரை

இலங்கை

லங்காபுரியானது
ஈடு அழிய

சீர்குலையும் படியாக
கட்டிய

(வானர சேனையைத் துணைகொண்டு) கட்டின
சேது

திருவணை
இது

இதுகாண்மின்,
விலங்கு

திர்யக்யோநியிற் பிறந்தவனான
வாலியை

வாலியை
வீழ்த்தது

முடித்தது
எய்தான்

அம்புகளைச் செலுத்தின இராமபிரானுடைய
இது

இப்போது நடந்த செயல்காண்மின்,
இலங்கை தான்

லங்காபுரியானது
ஒடுங்க

அழியும்படியாகவும்
வில் நுடங்க

சார்ங்கலில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க

(அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலையணிந்து கொண்டிருந்த இராவணனுடைய உடல் ஒழியும்படியாகவும்
உகப்பு

விலையான வியாபாரம்
இது

இது காண்மின்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இராமபிரானுடைய சில வீரச்செயல்களைப் பேசியநுபவிக்கிறார்.

இலங்கை ஈடழியக்கட்டிய சேது இது-விபீஷணாழ்வான் இராமபிரான் பக்கல் வந்து சேர்ந்து உயந்தபின் பெருமாளைப் பார்த்து “ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலைக்கடந்து அப்பாற் செல்ல வேண்டுமாதலால் அதற்காகக் கடலாசனை நீர் சரணம்புகவேணும்“ என்ன, இராமபிரான் “கடலைக் கடக்க உபாயம் சொல்லவேண்டும்“ என்று கடலரசனாகிய வருணைனைப் பிரார்த்தித்துத் தர்ப்பசயனத்தில் படுத்து மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக் கிடக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமையைக் கருதாமல் உபேகைஷயாயிருந்து விடவே ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு “அனைவரும் நடந்தே செல்லும்படி கடலை வற்றசெய்வேன்“ என்று ஆக்நேயாஸ்த்ரத்தைத் தொடுக்கத்தொடங்கிய வளவிலே வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு, நளன்கையினால் நீரில்போட்ட கற்களும் மிதக்குமென்று அவனுக்கு அவன் தகப்பனால் வரமளித்திருக்கிறாரார், ஆகையால் அவனைக் கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான், இராகவனும் அப்படியே மற்ற வானரங்கள் சுற்றுமுள்ள மலைகளைப் பிடுங்கிக்கொண்டு வந்து நளன் கையில் கொடுக்கச் செய்து நளன் கையினால் அம்மலைகளை நீரில் போகவிடுத்து ஸேதுகட்டுவித்தான் – என்பது திருவணைகட்டின வரலாறு. இது என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர்வற மதிநலதோற்றி விளங்குதலால் “கட்டிய சேது இது“ என்று கண்முன்னே கண்டதுபோலப் பேசுகிறார்.

இது விலங்கு வாலியை வீழ்த்தது – ஸுக்ரீவன் இராமபிரானோடு ஸ்நேஹஞ்செய்துகொண்டு அவனது நியமனத்தினால் கிஷ்கிந்தைக்குச் சென்று வீரநாதஞ்செய்ய, அதைகேட்டு வாலி பொறுக்க மாட்டாதவனாய் வெளிக் கிளம்பிவந்து ஸுக்ரீவனோடு யுத்தஞசெய்யத்தொடங்க, அப்போது இராமன் அவ்விருவரில் இன்னான் ஸுக்ரீவன் இன்னான் வாலியென்று வாசி கண்டறியாமையால் அம்பு எய்யாதொழியவே, ஸுக்ரீவன் வாலியிடத்துப் பராஜயப்பட்டு வேதனை பொறுக்கமாட்டாமல் ரிச்யமூகபர்வத்ததுக்கே மீண்டு ஓடிவந்து சேர, இராமன் அம்பு எய்யாத காரணங்கூறி “இப்போது உனக்கு ஒர் அடையாளம் இடுகிறேன், மறுபடியும் வாலியை யுத்தத்துக்கு அழை“ என்று சொல்லி அவன் கழுத்தில் ஒரு பூமாலையைச் சுற்றிக் கிஷ்கிந்தைக்குப் போகவிட, ஸுக்ரீவன் சென்று முன்போலவே வீரநாதஞ்செய்ய, அதைக்கேட்டு வாலி போருக்குப்புறப்பட, அப்போது அவன் மனைவியாகிய தாரை “ஓ பிராணநாதா! சற்று முன்பு அடிபட்டு ஓடினவன் திரும்பி இப்போதே சண்டைக்கு அழைக்கின்றமையால் இது வெறுமனன்று, ஏதோ ஒரு பெருத்த ஸஹாயத்தை அண்டைகொண்டு வந்திருக்கவேணும், நீ இப்போது திடீரென்று போர்க்குப் புறப்படுவது தகுதியன்று“ என்று சொல்லித் தடுத்தவளவிலும் அவள் வார்த்தையைச் செவியிலும் கொள்ளாமல் சடக்கெனப் புறப்பட்டுந்து ஸுக்ரீவனுடன் பிணங்கினான், அந்த வாலி ஸுக்ரீவரிருவரும் ஒருவர்க்கொருவர் கீழே தள்ளுவது மேலே பாய்வது கட்டிக்கொண்டு நெருக்குவது கடிப்பது குத்துவது அடிப்பதாய் வலிதான யுத்தஞ் செய்யுங்காலத்தில் இராகவன் ஒரு மரத்தடியில் மறைந்திருந்து வாலியைப் பாணத்தினாலடித்தார், அந்த பாணத்தினால் வாலி மார்பு பிளந்து கீழே விழுந்துவிட்டான், இதைத் தாரை கேள்விப்பட்டு அங்கதனென்னும் புத்திரனுடன் கூட ஓடிவந்து வாலியைத் தழுவிக்கொண்டு பலவாறு புலம்பி, பிறகு எதிரில் நின்ற இராமனைப் பார்த்து, அவருடைய மஹா புருஷலக்ஷணங்களைக் கண்டு இவர் ஸாக்ஷாத் பரமாத்மாவென்று நிச்சயித்துத் துகித்தனள். இராமனும் வாலியோடு வாதாடிப் பல ஸமாதானங்கள் சொல்லக் கேட்டு நன்மதிபெற்றுக் கைகூப்பி இராகவனைத் தொழுது “ஸுக்ரீவனைப்போல் அங்கதனையும் நோக்கிக் கொள்ளவேணும்“ என்று பிரார்த்தித்துவிட்டு ப்ராணனையும் விட்டான் – என்ற வரலாறு அறிக. ஆச்ரிதனான ஸுக்ரீவனிடத்தில் பக்ஷபாதத்தால் எம்பெருமான் செய்தருளின காரியம் இப்போதுதான் நடந்ததுபோல் ஆழ்வார்க்குத் தோற்றிற்றென்க.

“வீழ்த்ததுவும்“ என்று சிலர்க்குப் பாடமாம், அப்பாடத்தில் வெண்டளை பிறழும்.

திருவணை கட்டினதும் வாலியை வதைத்ததும் இராவணனைக் கொன்றதும் எம்பிரான் அவலீலையாகச் செய்த செயல்கள் என்றதாயிற்று இப்பாட்டால்.

English Translation

This is the bridge that the Lord made to destray Lanka. This is where he killed vali. This where he minced the mighty Lanka’s king Ravana with his bow.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top