(2212)
பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,
குராநல் செழும்போது கொண்டு, – வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.
(2213)
மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, – மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும்,
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து.
(2214)
துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல் கால், – பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,
வாய்திறங்கள் சொல்லும் வகை.
(2215)
வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,
புகையால் நறுமலாரால் முன்னே, – மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,
என்பாக்கி யத்தால் இனி.
(2216)
இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், – இனிதென்று
காமநீர் வேளாது நின்பெரு மை வேட்பரேல்,
சேமநீ ராகும் சிறிது.
(2217)
சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,
அறியாரும் தாமறியா ராவர், – அறியாமை
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,
எண்கொண்டேன் னெஞ்சே. இரு.
(2218)
இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,
திருந்து திசைமுகனைத் தந்தாய், – பொருந்தியநின்
பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்
ஏதங்க ளெல்லா மெமக்கு.
(2219)
எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,
தமக்கென்றும் சார்வ மறிந்து , – நமக்கென்றும்
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லோத்து.
(2220)
ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே,
உத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.
(2221)
சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், – திருப்பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத
போகத்தா லில்லை பொருள்.
