(2220)

(2220)

ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே,

உத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை

வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்

சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.

 

பதவுரை

ஏழைகாள்

‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,

ஓத்து அதனை

வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)

வல்லீர் ஏல்

ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்

நன்று

அப்படியே வேதமோதுவது நல்லது;

அதனை மாட்டீர் ஏல்

அது செய்ய சக்தியற்றவர்களாகில்

மாதவன் பேர்

திருமாலின் திருநாமங்களை

சொல்லுவதே

உச்சரிப்பதே

ஓத்தின்  சுருக்கு

ஸகல வேதங்களின் ஸாரமாகும்;

ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே

வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)

உத்தமன்

புருஷோத்தமனான எம்பெருமானுடைய

பேர்

திருநாமங்களைக் கொண்டு

ஏத்தும் திறம்

(அவனைத்) துதிக்கும் வகையை

அறிமின்

தெரிந்து கொள்ளுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்கல வேத வேதாந்த விழுப்பொருளை உங்கட்குச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன் கேளுங்கள்; சக்தியுண்டாகில் வேதங்களை அதிகரித்து அவற்றின் மூலமாக ஸ்ரீமந்நாராயணனது திருநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுங்கள் “வேதாக்ஷராணி யாவந்தி படிதாநி த்விஜாதிபி: தாவந்தி ஹரிநாமாநி கீர்த்திதாநி ந ஸம்சய:” (அதாவது – அந்தணர்களால் வேதத்தின் எத்தனை அக்ஷரங்கள் ஓதப்படுகின்றனவோ அத்தனையும் பகந் நாமங்களே ஓதப்பட்டனவவ் என்றாற்போலே வேதாக்ஷரங்களைக் கொண்டே ஹரிநாம ஸங்கீர்த்தநம் பண்ணுங்கள் என்றவாறு)  அதில் சக்தியும் அதிகாரமுமில்லா தவர்களா யிருப்பின் ‘கேசவா!, கோவிந்தா!, மாதவா!, மதுஸூதநா!’ என்றாவது சொல்லிக் கொண்டிருங்கள்.  எவ்வகையினாலாவது எம்பெருமானது திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணவேணுமென்பதே ஸகல்வேத தாத்பர்யமாகும்.

“த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்வாபரே ர்ச்சயந் யதர்ப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம்” கிருதயுகத்தில் தியானஞ் செய்வதாலும் த்ரேதாயுகத்தில் வேள்விகள் செய்வதாலும், த்வாபரயுகத்தில் அர்ச்சிப்பதாலும் எவ்விதமான பேற்றைப் பெறுகிறானோ, அவ்விதமான பேற்றை கலியுகத்தில் திருநாம ஸங்கீர்த்நத்தினால் பெறுகிறான் என்று சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டுள்ளது காண்க: இதுபற்றியே “ஓத்தின் பொருள்முடிவு மித்தனையே” என்றும் “மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின்சுருக்கு” என்றும் இதிற் சொல்லப்பட்டது.

வேதத்தில், இந்திரன் சந்திரன்  வருணன் என்றிப்படி பலப்பல நாமங்கள் வந்தாலும் அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணன் வரையிற் சென்று அர்த்தஜ்ஞாந முண்டாக வேணுமென்பது வேதாந்திகளின் கொள்கை.  ஆகவே “வேதை: ச ஸர்வைரஹமேவ வேத்ய:” ஸகல வேதங்களாலும் அறியப்படுபவன் நானே” என்று அப்பெருமானே சோதி வாய்திறந்து அருளிச் செய்திருப்பதற் கிணங்க வேதங்களிலுள்ள  ஸகல தேவதா நாமங்களையும் பகவத்பரமாக நிர்வஹித்து அநுஸந்திப்பதே வேததாத்பர்ய ஸாரமாகும்.  இதற்கு சாஸ்த்ரஜ்ஞாநம் விசேஷமாக வேண்டியிருப்பதால் அவ்வளவுக்கு அதிகாரிகளல்லாதவர்கள் திருமகள்நாதனை ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிற ‘மாதவன்’ முதலிய திருநாமங்களைக் கொண்டே ஏத்தலாம் என்பதும் இப்பாசரத்தின் கருத்தாகும்.

 

English Translation

The learned vedas says this  in one voice, O people! know the power of praise, Good if you can master the sacred texts. If not, the name Madava alone will suffice.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top