(2217)
சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,
அறியாரும் தாமறியா ராவர், – அறியாமை
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,
எண்கொண்டேன் னெஞ்சே. இரு.
பதவுரை
|
சிறியார் |
– |
(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய |
|
பெருமை |
– |
(நானே ஈச்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது |
|
சிறிதின் கண் எய்தும் |
– |
(தமக்குப்பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்; |
|
அறியாரும் |
– |
அவிவேகிகளும் |
|
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்) |
||
|
தாம் அறியார் ஆவர் |
– |
(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்; |
|
என் நெஞ்சே |
– |
என் மனமே!. |
|
அறியாமை |
– |
பிறர் அறியாதபடி |
|
மண்கொண்டு |
– |
(மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும் |
|
மண் உண்டு |
– |
இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும் |
|
மண் உமிழ்ந்த |
– |
(பிறகு) அந்தப்பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற |
|
மாயன் என்று |
– |
ஆச்சர்யகரனான எம் பெருமான் என்று |
|
எண்கொண்டு |
– |
இடைவிடாது கருதி |
|
இரு |
– |
(அவனைப்பற்றின நமக்கு ஒரு குறை இல்லையென்று) நிர்ப்பரனாக இருப்பாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் நாட்டாருடைய செயலை நினைந்து வெறுத்த ஆழ்வார் இதில் தம் திருவுள்ளத்தை நோக்கி ‘நெஞ்சே! உலகத்தார் ஒழிகிறபடி ஒழிக; நீ எம்பெருமானுடைய சேஷ்டிதங்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிரு’ என்று உபதேசிக்கிறார்.
சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும் = உலகத்தில், இயற்கையாகச் சிறிதேனும் மேன்மையுடையவர்களாயிருந்தால் அவர்கள அதிகப்படியாக மேன்மையை ஏறிட்டுக்கொண்டாலும் ஒருவாறு ஏற்கும்; சிறிதும் மேன்மையற்றவர்கள் ‘நாமே பெரியோம்; நம்மிற் பெரியாரில்லை’ என்று மார்பு நெறித்தால் அந்த அஹங்காரமானது அவர்களுடைய சிறுமையை நன்கு ஸ்தாபித்துவிடும். ஆகையாலே அற்ப தேவைகளான பிரமன் முதலியோரைப் பெருந்தலைமை யுடையவராக மதிப்பது நம்மைத் தாழ்ந்த நிலைமையிற் சேர்ப்பிக்கு மென்றவாறுமாம். எய்தும் – எய்துவிக்கும்; பிறவினையில் வந்த தன்வினை. இவ்வாறு வருவதனை வடநூலார் ‘அந்தர்ப்பாவிதணிச்’ என்பர்.
அறியாரும் தாமறியாராவார் = ஒன்றுந் தெரியாத மூடர்கள் எல்லாமறிந்தவர்கள் போலப் பாவித்திருந்தார்களாகிலும், அப்படிப்பட்டவர்கள் நன்மைகளைத் தாங்களுமறியார்கள்; பிறர் போதித்தாலும் கேட்டு உணரமாட்டார்கள்; ஆகவிப்படி சிறியாரும் அறியாரும் மலிந்து கிடக்கிற இந்நிலத்திலே, நெஞ்சே! நீ அவர்களின் வகுப்பில் சேராமல் பகவத் விஷயத்தையே சிந்தித்திரு – என்கிறார் பின்னடிகளால்.
அறியாமை = எதிர்மறை வினையெச்சம். ‘திருமால்தான் இப்படி வாமந வேஷங்கொண்டு யாசகனாய் வந்தா’ னென்று பிறர் அறியாதவண்ணம் என்றபடி.
English Translation
Praising small gods can only give small ends. The ignorant ones will remain forever ignorant. O Heart of mine1 Always recall the wonder Lord who mysteriously measured the earth, swallowed it and brought it out again.
