(2221)

(2221)

சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்

நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், – திருப்பொலிந்த

ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத

போகத்தா லில்லை பொருள்.

 

பதவுரை

ஐயார்

கோழையானது

சுருக்காக வாங்கி

சரீரத்தைச் சுருங்க வலித்து

சுலாவி நின்று

உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று

நெருக்காமுன்

(உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,

திரு பொலிந்த ஆகத்தான் பாதம்

பிராட்டியாலேர விளங்குகின்ற திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை

நீர் நினைமின்

நீங்கள் சிந்தியுங்கோள்:

அறிந்தும்

பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்

அறியாத

அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல

போகத்தால்

சப்தாதி விஷயங்களால்

பொருள் இல்லை

ஒரு ப்ரயோஜனமுமில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிற்றின்பங்களில் ஆழ்ந்து திரிகின்ற விஷயப்ரவணர்களை விளித்து ‘நீங்கள் இப்படி விஷயபோகங்ள் செய்வதனால் சிறிதும் பலனில்லை; லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய திருவடிகளையே சிந்தித்திருங்கள்; ஆனால் நீங்கள் என்ன நினைக்கலாமென்றால்,எம்பெருமானைச் சிந்திப்பதற்கு இப்போது என்ன அவஸரம்?  போகப்போகப் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்திருக்கலாம்; இவ்வழுக்குடம்பின் தன்மை உங்களுக்குத் தெரியாதோ? கோழையானது சரீரமெங்கும் சூழ்ந்து கொண்டு உடம்பைச் சுருங்கடித்து ஒன்றைச் சிந்திக்கவும் ஒன்றைச் சொல்லவும் முடியாதபடி திடீரென்று பண்ணிவிடும்; “ப்ராணப்ரயாணஸமயே கபவாதபித்தை:  கண்டாவரோதநவிதௌ ஸ்மரணம் குதஸ்தே” = உயிர்போகுங்காலத்தில் கபம், வாயு, பித்தம் முதலியவற்றால் கழுத்து அடைபட்டுவிட்டால் உன்னைச் சிந்திக்கமுடியுமோ?” (முகுந்தமாலை) என்று ஞானிகளும் சொல்லிவைத்திருக்கிறார்கள்: நமக்கு இன்னமும் நீண்ட ஆயுள் இருக்கின்றதென்று நம்பியிருக்க இடமுண்டோ? இல்லை; ஆதலால் சிலேஷ்மம் வந்து கட்டி வருத்துவதற்கு முன்னமே திருமகள் கொழுநனுடைய திருப்பாதங்களைச் சிந்தித்து வாழுங்கள்.  நீங்கள் பற்றியிருக்கிற விஷயபோகங்கள் எப்படிப்பட்டவை யென்றால், பகவத் விஷயஜ்ஞாநம்  சிறிது இருந்தாலும் அதனை உருமாய்க்குமவை; ஆகவே அப்படிப்பட்ட விஷயபோகங்களால் உங்களுக்கு அநர்த்தமே பலிக்குமே யன்றி வேறொரு நன்மையும் நேரிடாது என்று உபதேசித்தாராயிற்று.

ஐயார் = ‘ஐ’ என்று கோழைக்குப் பெயர்; ‘ஆர்’ விகுதி – இழிவு சிறப்பு.  கலாவுதல் -சூழ்ந்து கொள்ளுதல்.

அறிந்துமறியாத போகத்தால் = விவேகிகளையும் அவிவேகிகளாகச் செய்யவல்ல விஷயபோகம் என்கை.  அன்றியே; ‘விஷயபோகம் பொல்லாதது’ என்று தெரிந்துகொண்டாலும் அந்த அறிவின் பலனாக அதை விட்டுத் தொலைக்கணுமே; அப்படி விடமுடியாத போகம் – என்றும்பொருள் கூறுவர்.  இப்பொருளில், ‘அறியாத’ என்றது – அறிவின் காரியமான விடுகையைப் பெறமாட்டாத என்றபடி.  மஹாகவிகளின் பிரயோகங்களில், சொல்மிகச் சுருங்கிப் பொருள் மிக விரிந்திருக்குமே.

 

English Translation

Suffice your life of mindless pleasure, -It is of no use! Before phlegm fills your chest and blocks your breath, contemplate the feet of the lord with sri on his chest. Know this for certain.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top