(2222)

(2222)

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது

அருளா லறமருளு மன்றே, – அருளாலே

மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,

நீமறவேல் நெஞ்சே நினை.

 

பதவுரை

அமருலகம்

சுவர்க்கலோகத்தை

பொருளால்

‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்

புக்குஇயலல் ஆகாது

போய்ச்சேர முயல்வது தகாது;

அருளான்

பரமதயாளுவான எம் பெருமான்

அறம்

புண்யத்தின் பயனான சுவர்க்கலோகத்தை

அருளும் அன்றே

தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;

அருளாலே

கிருபையினாலே

மா மறை யோர்க்கு

மஹர்ஷிகளுக்கு

ஈந்த

முக்தியளித்த

மணிவண்ணன் பாதமே

நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே

நெஞ்சே நீ மறவேல்

நெஞ்சே! நீ மறவாதே

நினை

தியானித்துக் கொண்டிரு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்னடிகட்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு.  கீழ்ப்பாட்டில் காம புருஷார்த்தத்தை நிந்தித்தார்: விஷயபோகங்கள் கர்ம புருஷார்த்தத்தைச் சேர்ந்தவையாதலால் அவற்றை ஹேயமென்பது காம புருஷார்த்தத்தை ஹேயமென்ற வாறாம்.  இப்பாட்டில் அர்த்த புருஷார்த்தத்தை நிந்திக்கிறார்.  விசேஷமாகப் பொருள்களை ஸம்பாதித்து அவற்றால் யஜ்ஞாயாகங்களைப் பண்ணி அவற்றின் பலனாக ஸ்வர்க்கலோகத்தை யடைந்து ஸுகிப்பது – என்றொரு வழியுண்டே; அவ்வழியையும் மேற்கொள்ளவேண்டா வென்கிறது.  பொருளால் அமருலகம் புக்கியலாகாது = அர்த்த புருஷார்த்த மென்கிற திரவியங்களைக் கொண்டு ஸ்வர்க்கலோகத்தைப் பெறுவோமென்று அதற்கு முயற்சி செய்யலாகாது என்றபடி.  அன்றியே, பொருளால் = இது நமக்குப் புருஷார்த்தம் என்னும் புத்தியோடே, ஸ்வர்க்கலோக ப்ராப்தியை விரும்பி அதற்காக நீங்கள் எம் பெருமானையே அடிபணிந்தால் அவன் கருத்தறிந்து காரியஞ்செய்யுமவனாகையால் ‘நம்மை அடுத்திருக்கு மிவர்களுக்கு ஸ்வர்க்கத்தில் நசையாகில் அதையும் அநுபவித்துத் தீரட்டும்’ என்று கிருபை பண்ணியருள்வன்; அதற்காக நீங்கள் தனிப்பட ஒரு ப்ரயாஸங்கொள்ள வேண்டா; எது வேணுமானாலும் மணிவண்ணன் பாதமே நினைக்கத்தகும் – என்கிறார்.

“நெஞ்சே!- நீ மறவேல்” என்று தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாயிருந்தாலும் இதை அந்யாப தேசமாகக் கொள்ளவேணும்; பிறரைக் குறித்துச் சொல்ல வேண்டுவதையும் தம்மை நோக்கிச் சொல்லிக்கொள்வதுண்டு: திருவாய்மொழியில் (8- 3 -2) “சரணமாகிய  நான்முறை நூல்களுஞ் சாராதே, மரணந்தோற்றம் வான்பிணி மூப்பொன்றி வைமாய்த்தோம்” என்றவிடங்காண்க. இங்கு, முன்னிலையாகச் சொல்ல வேண்டியதைத் தன்மையாகச் சொல்லியிருத்தல் உணர்க.

அமருலகம் – ‘அமரருலகம்’ என்பதன் விகாரம்.  ‘அறம்’ என்பது தர்மத்துக்குப் பேராயினும் தர்மத்தினால் ஸாத்யமான புண்யலோகத்தைச் சொல்லுகிறது.  இங்கு அருளும் = செய்யுமென்முற்று.

மூன்றாமடியில் “மாமறையோர்க்கு” என்றும் “மாமறையோற்கு” என்றும் பாடபேதமுண்டு; முந்தின பாடத்தில் பன்மை; பிந்தின பாடத்தில் ஒருமை, பன்மையாகில் தண்காரண்ய வாஸிகளான முனிகளைச் சொல்லுகிறது; சுகர், வாமதேவர் முதலிய ரிஷிகளைச் சொல்லவுமாம்; ஒருமையாகில், மார்க்கண்டேயனைச் சொல்லுகிறதாம்.  முத்தியளிக்கவல்ல முகுந்தன் பாதமேபற்றினால் முதலில் ஸ்வர்க்கத்தையும் பெறலாம்; காலக்கிரமத்தில் முத்தியையும் பெற்று வாழலாம் என்பதும் இதில் தொனிக்கும்.

முதலடியில் ‘அமருலகம்’ என்றதும் இரண்டாமடியில் ‘அறம்’ என்றதும் மோக்ஷலோகத்தையே சொல்லுவதாகவும் ஒரு யோஜநையுண்டு.  அப்போது, ‘பொருளால்’ என்றது – ஸாதநாநுஷ்டதத்தினால் என்றபடி; > ஆக, மோக்ஷத்துக்காக ஒரு ஸாதநாநுஷ்டாநம் பண்ணவேணுமென்பதில்லை; பரமதயாளுவான எம்பெருமான் அதை நிர்ஹேதுக கிருபையினாலே தந்தருள்வன்; அப்படியே பல வைதிகர்களுக்கு அவன்  அருளியிருக்கிறான்; இப்படியாகில் எல்லார்க்கும் மோக்ஷமளிக்க வேண்டிவருமே யென்னில், இந்த ஸர்வமுக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக அந்த மணிவண்ணனது திருவடிகளைச் சிந்தித்தல் வேண்டும் – என்பதாகக் கருத்துக் கொள்ளலாம்.

 

English Translation

With certainty contemplate, and never forget, -O Heart!, -the feet of the gem-hued Lord who gave himself to the vedic seers. Wealth cannot give us entry into the world of celestials.  That righteous world is got by the grace of the Lord alone.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top