(2216)

(2216)

இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,

இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், – இனிதென்று

காமநீர் வேளாது நின்பெரு மை வேட்பரேல்,

சேமநீ ராகும் சிறிது.

 

பதவுரை

எந்தாய்

என் ஸ்வாமி யானவனே!

(பாமரர்கள்)

காமம்

ஹேயமான சப்தாதி விஷயங்களை

இனிது என்பர்

போக்யமாகக் கொள்பர்;

(விரக்தர்களுங்கூட)

தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர்

அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;

காமம் நீர்

(கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்

இனிது என்று வேளாது

போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்

நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்

உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)

சேமம் நீர் ஆகும்

(எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையையுடையதாகும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- 1. “உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்வாங் கண்ணன்” என்கிறபடியே பரம்போக்யனான நீயிருக்கையில்’ நாட்டிலுள்ளவர் உன்னையே நாரக போஷக போக்யங்களாகப் பற்றாமல் சப்தாதிவிஷயங்களை விரும்பித் திரிகின்றார்களே! என்று உலகத்தார் செயலை வெறுத்து உன்னைப் பற்றுவதே எல்லார்க்கும் தஞ்சமென்று கூறுகிறார். ‘காமம்’ என்பது ஆசைக்குப் பேராயினும் ஆசைபடுவதற்கு உரிய விஷயாந்தரங்களையும்  சொல்லக் கடவது: கூத்துப் பார்ப்பது, பாட்டுக்கேட்பது, பூச்சூடுவது சாந்து பூசுவது, மாதர்களை யணைவது முதலியவை விஷயாந்தரங்க ளெனப்படும். இவையே போக்யமென்று ஒழிவர் பலர்; மற்றும் பலர் விஷயாந்தர விரக்தர்களென்று பெயர் சுமந்தும் சோற்றையுந் தண்ணீரையும் விட்டிருக்கமாட்டாமல் அவற்றை போக்யமாகக் கொள்வர்.  அநந்ய போக்யத்வத்தை ஸ்வரூபமாக வுடைய அதிகாரிகள் முதலடியிற் சொன்ன விஷயாந்தரங்களையும் இரண்டாமடியிற் சொன்ன தண்ணீர் முதலியவற்றையும் போக்யமாகக் கொள்ளாது “எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே” என்று பரமபோக்யனாகச் சொல்லப்படுகிற உன்னையே விரும்பப்பெறில் இவ்விருப்பமே அவர்கட்குச் செமமாகும் என்றாராயிற்று.

இரண்டாமடியிற் ‘தண்ணீர்’ என்றதும் மூன்றாமடியில் ‘நீர்’ என்றதும் –  சோறு, வெற்றிலை முதலியவற்றுக்கும் உபலக்ஷணமென்க.  “வாஸூதேவஸ்ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப.” என்று பகவத் கீதையிலே துர்பலனாகச் சொல்லப்பட்டுள்ள மஹாத்மாவாக இருக்குமவர்கட்கே குறைவற்ற சேமமுண்டாகுமென்றதாயிற்று.

சேமநீர் = ‘க்ஷேமம்’ என்னும் வடசொல் சேமமெனத் திரிந்தது.  நீர் – நீர்மையையுடையது; நீர்மையாவது தன்மை.

 

English Translation

O My refuge! They say kama is sweet, but sweeter still is water. As well-being is assured, If eschewing both, one sweetly offers a little praise.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top