ஒன்பதாந் திருமொழி
(97)
பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக்கோட்டரா அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ
(98)
செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப
சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய
அங்கைக ளாலேவந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ.
(99)
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ.
(100)
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன
தேறி அவளும் திருவுடம் பில்பூச
ஊறிய கூனினை உள்ளே யொடுங்கஅன்று
ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ.
(101)
கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்துஉன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோ தனனை
அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ.
(102)
போரொக்கப் பண்ணிஇப் பூமிப் பொறைதீர்ப்பான்
தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
காரொக்கும் மேனிக் கரும்பேருங் கண்ணனே
ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ.
(103)
மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்
தக்கதி தன்றென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக்கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ.
(104)
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ.
(105)
கண்ட கடலும் மலையும் உலகேழும்
முண்டத்துக் காற்றா முகில்வண்ணா ஓஒவென்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ.
(106)
துன்னிய பேரிருள் சூழ்ந்துஉல கைமூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்கஅன்று
அன்னம தானானே அச்சோ வச்சோ அருமறை தந்தானே அச்சோ வச்சோ.
(107)
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருகவென்று ஆய்ச்சயு ரைத்தன
மச்சணி மாடப் புதுவைகோன் பட்டன்சொல்
நச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.
