ஒன்பதாந் திருமொழி
(1828)
மூவ ரில்முன்மு தல்வன் முழங் கார்கட லுள்கிடந்து,
பூவுல ருந்திதன் னுள் புவனம் படைத் துண்டுமிழ்ந்த,
தேவர் கள்நா யகனைத் திருமா லிருஞ்சோலை நின்ற,
கோவ லர்கோவிந் தனைக் கொடி யேரிடை கூடுங்கொலோ.
(1829)
புனைவளர் பூம்பொழி லார் பொன்னி சூழரங் கநகருள்
முனைவனை, மூவுல கும்படைத் த முதல் மூர்த்திதன்னை,
சினைவளர் பூம்பொழில் சூழ் திரு மாலிருஞ் சோலைநின்றான்
கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே.
(1830)
உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல்,
கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை,
திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே.
(1831)
சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த,
பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை,
திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே.
(1832)
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து,
வானமும்மண் ணகமும் அளந்த திஜீவிக் கிரமன்,
தேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற,
வானவர் கோனையின்று வணங்கித்தொழ வல்லள் கொலோ.
(1833)
நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான்,
வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான்,
தேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ.
(1834)
புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து,
கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை,
தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ.
(1835)
பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று,
காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை,
தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,
மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே.
(1836)
வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை,
புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை,
சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற,
நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே.
(1837)
தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற,
ஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று,
மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன
பாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே.
