முதல் திருமொழி
(1448)
வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு பண்டைநம் வினைகெட வென்று,அடிமேல்
தொண்டரு மமரும் பணியநின்று அங்கண்டமொ டகலிட மளந்தவனே
ஆண்டாயுனைக் கான்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
(1449)
அண்ணல்செய் தலைகடல் கடைந்த்து அதனுள் கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே
விண்ணவ ரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்டவெம் பெருமானே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
(1450)
குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட தழல்நிற வண்ணன்நண் ணார்நகரம்
விழ நனி மலைசிலை வளைவுசெய்துஅங் கழல்நிற அம்பது வானவனே
ஆண்டாயுன்னைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
(1451)
நிலவொடு வெயில்நில விருசுடரும் உலகமு முயிர்களு முண்டொருகால்,
கலைதரு குழவியி னுரு வினையாய் அலைகட லாலிலை வளர்ந்தவனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே
(1452)
பாரெழு கடலெழு மலையெழுமாய்ச் சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,
ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்றுஅங் கோரெழுத் தோருரு வானவனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
(1453)
கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர்கெழு முலகமு மாகி,முத
லார்களு மறிவரு நிலையினையாய்ச் சீர்கெழு நான்மறை யானவனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
(1454)
உருக்குறு நறுநெய்கொண் டாரழலில் இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,
பெருக்கமொ டமரர்க ளமரநல்கும் இருக்கினி லின்னிசை யானவனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
(1455)
காதல்செய் திளையவர் கலவிதரும் வேதனை வினையது வெருவுதலாம்,
ஆதலி னுனதடி யணுகுவன் நான் போதலார் நெடுமுடிப் புண்ணியனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
(1456)
சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக் காதல்செய் யாதுன கழலடைந்தேன்,
ஓதல்செய் நான்மறை யாகியும்பர் ஆதல்செய் மூவுரு வானவனே,
ஆண்டாய் உனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
(1457)
பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,
காமரு சீர்க்கலி கன்றிசொன்ன,
பாமரு தமிழிவை பாடவல்லார்,
வாமனன் அடியிணை மருவுவரே.
