(1448)

(1448)

வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு பண்டைநம் வினைகெட வென்று, அடிமேல்

தொண்டரு மமரும் பணியநின்று அங்கண்டமொ டகலிட மளந்தவனே

ஆண்டாயுனைக் கான்பதோ ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.

 

பதவுரை

அமரரும்

தேவர்களும்

தொண்டரும்

(மற்றுமுள்ள) பக்தர்களும்

நம் பண்டை வினை கெட என்று

‘நமது முன்னைத் தீவினைகளெல்லாம் தொலையவேணும்‘ என்று மநோரதித்து,

வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு

வண்டுகள் மதுவுண்ணப் பெற்ற மணம் மிக்க பூக்களினாலாகிய மாலைகளை ஏந்திக்கொண்டு

அடிமேல் பணிய நின்று

திருவடிகளிலே விழுந்து ஸேவிக்கும்படியாக நின்று

அங்கு

அப்போதே

அண்டமொடு

அண்டங்களையும்

அகல் இடம்

பரந்த பூமியையும்

அளந்தவனே

(திருவடிகளால் வியாபித்து) அளந்து கொண்டவனே!

ஆண்டாய்

அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!

விண்ணகர் மேயவனே

திருவிண்ணகரில் நித்ய வாஸம் செய்பவனே!

உன்னை காண்பது ஓர் அருள்

உன்னை நான் ஸேவிக்கும்படியான க்ருபையை

எனக்கு அருளுதி ஏல்

என் விஷயத்தில் செய்தருள்வாயாகில்

மனை வாழ்க்கையை

(இனி) ஸம்ஸார வாழ்க்கையை

வேண்டேன்

விரும்பமாட்டேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இவ்வுலகமெல்லாம் பிறர் வசப்பட்டிருக்கையில் தன் திருவடிகளைப் பரப்பி இலச்சினைபட நடந்து அவற்றை ஆட்படுத்திக்கொண்டது போலவே அடியேனையும் ஆட்படுத்திக்கொள்ளவேணும்; உனது ஸ்வரூபரூபகுண விபூதிகளையெல்லாம் அடியேன் ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி அருள்புரியவேணும்; இவ்வளவே அடியேன்; இப்பாழும் ஸம்ஸாரத்தில் அடியேனுக்கு இனி வாழ்வுவேண்டா; திருவிண்ணகரிலே வந்து நித்ய ஸந்நிதி பண்ணியிருப்பது ஸபலமாகும்படி இத்தனை யருள் செய்யவேணும் என்றாராயிற்று.

உலகளந்தபோது  “பல தேவரேத்தப்படி கடந்தான்” என்கிறபடியே பல தேவர்கள் புஷ்பங்களைத் திருவடிகளிற் பணிமாறி வழிபாடுகள் செய்தமை முன்னடிகளிற் கூறப்பட்டது. ‘வண்டுணும்‘ என்ற அடைமொழியினால் மதுவெள்ள மொழுகப்பெற்ற மலர்கள் என்றதாம்.  உணும் – உண்ணும்; தொகுத்தல். இண்டை – பூமாலை.  அருளுதியேல் – அடியேன் பக்கல் அருள்செய்யத் திருவுள்ளமாகில், எனக்கு உன்னைக் காண்பதோரருள் (செய்யத்தக்கது); இவ்வருளையன்றி மனைவாழ்க்கையை வேண்டேன் என்று முரைப்ப.

இத்திருமொழி வஞ்சி விருத்தத்தினா லமைந்தது.  இறுதிப்பாட்டொழிந்த ஒவ்வொரு பாட்டிலும் “வேண்டாய்…… மேயவனே” என்ற அளவடியிரண்டும் தனிமகுடம்.

 

English Translation

Bee-humming fresh flower garland in hand, Gods and devotees do offer worship, seeking their freedom from Karmic misery.  Lord, who in yore came to measure the Earth! O Lord if you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top