ஆறாந் திருமொழி
(1098)
நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு, வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார், மருவினிய
தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை,
எண்ணாதே யிருப்பாரை யிறைப்பொழுது மெண்ணோமே.
(1099)
பார்வண்ண மடமங்கை பனிநன்மா மலர்க்கிழத்தி,
நீர்வண்ணன் மார்வகத்தி லிருக்கையைமுன் நினைந்தவனூர்,
கார்வண்ண முதுமுந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்,
ஆரெண்ணும் நெஞ்சுடையா ரவரெம்மை யாள்வாரே.
(1100)
ஏனத்தி னுருவாகி நிலமங்கை யெழில்கொண்டான்,
வானத்தி லவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற,
ஞானத்தி னொளியுருவை நினைவாரென் நாயகரே.
(1101)
விண்டாரை வென்றாவி விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே.
(1102)
பிச்சச் சிறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர்,
விச்சைக் கிறையென்னு மவ்விறையைப் பணியாதே,
கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,
நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே.
(1103)
புலன்கொள்நிதிக் குவையோடு புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும் சுமந்தெக்கும் நான்றொசிந்து,
கலங்களியங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்,
வலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்ளென் மடநெஞ்சே.
(1104)
பஞ்சிச் சிறுகூழை யுருவாகி, மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட அண்ணல்முன் நண்ணாத,
கஞ்சைக் கடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே.
(1105)
செழுநீர் மலர்க்கமலம் திரையுந்த வன்பகட்டால்,
உழுநீர் வயலுழவ ருழப்பின்முன் பிழைத்தெழுந்த,
கழுநீர் கடிகமழும் கடன்மல்லைத் தலசயனம்,
தொழுநீர் மனத்தவரைத் தொழுவாயென் தூயநெஞ்சே.
(1106)
பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு,
இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்,விசும்பில்
கணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம்,
வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே.
(1107)
கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே.
