(1102)

(1102)

பிச்சச் சிறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர்,

விச்சைக் கிறையென்னு மவ்விறையைப் பணியாதே,

கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,

நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே.

 

பதவுரை

பிச்சம் சிறு பீலி

(மயிலிறகுகளினால் செய்யப்பட்ட) குடையையும் சிறிய விசிறியையு முடைய

சமண் குண்டர் முதலாயோர்

நீசரான சமணர் முதலானவர்கள்

விச்சைக்கு இறை என்னும்

ஸர்வஜ்ஞனென்று சொல்லிக் கொண்டாடுகிற

அவ் இறையை

அந்த அமணச்சாமியை

பணியாதே

பணியாமல்.

கச்சி கிடந்தவன் ஊர் கடல்மல்லை தலசயனம் நச்சி தொழுவாரை

கச்சியில் (திருவெஃகாவில்) பள்ளி கொள்ளும் பெருமானது திவ்யதேசமாகிய திருக்கடல் மல்லையை விரும்பித் தொழுகின்ற பாகவதர்களை

என் தன் நல் நெஞ்சே!

எனது நல்ல நெஞ்சமே!

நச்சு

நீ விரும்பித்தொழு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இவ்வுலகில் அவைதிகங்களான மதங்கள் பலவுண்டு; அவற்றில் போய்ச்சேருகிற ஜனங்கள் அதிகமேயன்றி, வைதிகஸம்ப்ரதாயத்திற் புகுமவர் குறைவாகவே யிருப்பர்; அப்படி அவைதிகமதங்களிற்சேர்ந்து தேவதாந்திரங்களைப் பணியாமல் திருக்கடன்மல்லைத் தலசயனத்துறைவாரைப் பணியுமவர்கள் எவரோ, அந்தப் பாகவதர்களையே தமது நெஞ்சு பணியக் கடவதென்கிறார்.  அவைதிகமதங்களில் ஒன்றான ஜைந மதத்தையெடுத்துப் பேசுகிறார்-பிச்சச்சிறுபீலி இத்யாதியால்.

சமண்குண்டர் என்றது-குண்டரான சமணர் என்றபடி;  குண்டர்-நீசர்; சமணராவார்-அருகனை வழிபடுஞ்சமயத்தோராகிய ஆரகதரெனப்படும் ஜைநராவர்; இவர்கள் மிக்க தர்மிஷ்டர்களென்று தோற்றும்படியாக மயிற்பிச்சங்களைக் கட்டிக் கையிலேகொண்டு, எறும்பு முதலிய சிற்றுயிர்கட்குத் கொஞ்சமும் ஹிம்ஸை உண்டாகாதபடி அப்பீலிப்பிச்சங்களால் தரையை விளக்கிக்கொண்டு நடந்து செல்வதுபற்றிப் பிச்சச்சிறு பீலிச்சமண்குண்டர் என்றார்.

பிச்சச்சிறுபீலி யென்பதற்கு இரண்டு வகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு;- ‘புச்சம்’  என்ற வடசொல் பிச்சமெனத் திரிந்திருப்பதாகக்கொண்டு, கண்டம்கண்டமாயிருக்கிற மயிலிறகுகளைக் கொண்ட சமணர்கள் என்றுரைத்தல் ஒன்று.  பிச்சம் என்கிற தமிழ்ச்சொல் மயிலிறகினாற் செய்த குடையையும் பீலி என்பது விசிறியையும் சொல்லுமாதலால், குடையையும் விசிறியையும் கொண்ட சமணர் என்றுரைத்தல் மற்றொன்று.  இப்பொருளே பெரியவாச்சான்பிள்ளைக்குந் திருவுள்ளமானது; – நிழலுக்கீடாக ஒரு கையிலே பிச்சத்தைப் பிடித்து, ஒரு கையிலே பீலித்தழையைப் பிடித்து, கண்டார்க்கு ‘இவர்களும் சில தார்மிகரே!’ என்று தோற்றும்படி அநுவுலவேஷத்தைப் பரிக்ஹித்து!” என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

இச்சமணர்கள் ‘ஸர்வஜ்ஞன்’ என்றொரு தெய்வத்தைக்கொண்டு அத்தெய்வமே கல்விகட்குக் கடல் என்று சொல்லி அதனைப் பணிவர்களாம்-அதை இரண்டாமடியிலருளிச்செய்கிறார். “வித்யா” என்ற வடசொல் விச்சையென விகாரப்படும்.

“சமண்குண்டர் முதலாயோர்” என்ற ஆதி சப்தத்தினால் பௌத்தரையும் லோகாயதிகரையும் கொள்க.  முதலாயோரென்ற எழுவாய் இரண்டாமடியிலுள்ள என்னுமென்பதில் அந்வயிக்கிறது.  சமணர்களால் சொல்லப்படுகிற தெய்வத்தைப் பணியாமல் என்கை.

 

English Translation

The peacock-fan-waving Sramanas and others have a god for knowledge; instead of offering worship with them there, offer worship to the Lord of Vehka or to the Lord here in Kadal Mallai Talasayanam. O Heart, those who do so are our masters!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top