(264)
அட்டுக் குவிசோற் றுப்பருப் பதமும் தயிர்வா வியும்நெய் யளறும் அடங்கப்
பொட்டத் துற்றுமா ரிப்பகை புணர்த்த பொருமா கடல்வண் ணன்பொறுத் தமலை
வட்டத் தடங்கண் மடமான் கன்றினை வலைவாய்ப் பற்றிக் கொண்டுகுற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(265)
வழுவொன் றுமிலாச் செய்கைவா னவர்கோன் வலிப்பட் டுமுனிந் துவிடுக் கப்பட்டு
மழைவந்து எழுநாள் பெய்துமாத் தடுப்ப மதுசூ தன்எடுத் துமறித் தமலை
இழவு தரியாத தோரீற் றுப்பிடி இளஞ்சீ யம்தொடர்ந் துமுடு குதலும்
குழவி யிடைக்கா லிட்டெதிர்ந் துபொரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(266)
அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும் ஆனா யரும்ஆ நிரையும் அலறி
எம்மைச் சரணேன் றுகொள்ளென் றிரப்ப இலங்கா ழிக்கையெந் தைஎடுத் தமலை
தம்மைச் சரணென் றதம்பா வையரைப் புனமேய் கின்றமா னினம்காண் மினென்று
கொம்மைப் புயக்குன் றர்சிலை குனிக்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(267)
கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்
அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டுநின் றமலை
கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக் கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்
குடவாய்ப் படநின் றுமழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(268)
வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்துவாங் குமினென் பவன்போல்
ஏனத் துருவா கியஈ சன்எந்தை இடவ னெழவாங் கியெடுத் தமலை
கானக் களியா னைதன்கொம் பிழந்து கதுவாய் மதம்சோ ரத்தன்கை யெடுத்து
கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(269)
செப்பா டுடைய திருமா லவன்தன் செந்தா மரைக்கை விரலைந் தினையும்
கப்பா கமடுத் துமணி நெடுந்தோள் காம்பா கக்கொடுத் துக்கவித் தமலை
எப்பா டும்பரந் திழிதெள் ளருவி இலங்கு மணிமுத் துவடம் பிறழ
குப்பா யமென நின்றுகாட் சிதரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(270)
படங்கள் பலவு முடைப்பாம் பரையன் படர்பூமி யைத்தாங் கிக்கிடப் பவன்போல்
தடங்கை விரலைந் தும்மல ரவைத்துத் தாமோ தரன்தாங் குதட வரைதான்
அடங்கச் சென்றுஇலங் கையையீ டழித்த அனுமன் புகழ்பா டித்தம்குட் டன்களை
குடங்கைக் கொண்டுமந் திகள்கண் வளர்த்தும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(271)
சலமா முகில்பல் கணப்போர்க் களத்துச் சரமா ரிபொழிந் துஎங்கும்பூ சலிட்டு
நலிவா னுறக்கே டகம்கோப் பவன்போல் நாரா யணன்முன் முகம்காத் தமலை
இலைவேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்றுஅணார் சொறிய
கொலைவாய்ச் சினவேங் கைகள்நின் றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(272)
வன்பேய் முலையுண் டதோர்வா யுடையன் வன்தூ ணெனநின் றதோர்வன் பரத்தை
தன்பே ரிட்டுக்கொண்டு தரணி தன்னில் தாமோ தரன்தாங் குதட வரைதான்
முன்பே வழிகாட் டமுசுக் கணங்கள் முதுகில் பெய்துதம் முடைக்குட் டன்களை
கொம்பேற் றியிருந் துகுதி பயிற்றும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(273)
கொடியே றுசெந்தா மரைக்கை விரல்கள் கோல மும்அழிந் திலவா டிற்றில
வடிவே றுதிரு வுகிர்நொந் துமில மணிவண் ணன்மலை யுமோர்சம் பிரதம்
முடியே றியமா முகிற்பல் கணங்கள் முன்னெற் றிநரைத் தனபோ லஎங்கும்
குடியே றியிருந் துமழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(274)
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகையூர் தியவ னுடைய
குரவிற் கொடிமுல் லைகள்நின் றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடைமேல்
திருவிற் பொலிமா மறைவா ணர்புத்தூர்த் திகழ்பட் டர்பிரான் சொன்னமா லைபத்தும்
பரவு மனநன் குடைப்பத் தருள்ளார் பரமா னவைகுந் தம்நண் ணுவரே.
