(412)
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழ
செருவுடைய திசைக்கருமம்திருத்திவந்து உலகாண்ட திருமால்கோயில்
திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர்கண்ணும் காட்டி நின்ற
உருவுடையமலர்நீலம் காற்றாட்ட ஓசலிக்கும் ஒளிய ரங்கமே.
(413)
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும் சிதகு ரைக்குமேல்
என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர் போலும்
மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க்கு ஆளா வாரே.
(414)
கருளுடைய பொழில்மருதும் கதக்களிறும் பிலம்பனையும் கடிய மாவும்
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடையவிட்டு ஓசை கேட்டான்
இருளகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி
அருள்கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வா னமருமூர் அணிய ரங்கமே.
(415)
பதினாறா மாயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை யென்னும்
அதில்நா யகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்
புதுநாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன்வயிற்றில் பூவே போல்வான்
பொதுநா யகம்பாவித்து இருமாந்து பொன்சாய்க்கும் புனல ரங்கமே.
(416)
ஆமையாய்க் கங்கையாய் ஆழ்கடலாய் அவனியாய் அருவ ரைகளாய் நான்முகனாய்
நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானு மானான்
சேமமுடை நாரதனார் சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ்குழறும் புனல ரங்கமே.
(417)
மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து அவர்களையே மன்ன ராக்கி
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய் நிற்கின்ற திருவ ரங்கமே.
(418)
குறட்பிரம சாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில்
எறிப்புடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின்வாய்
சிறப்புடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவ ரங்கமே.
(419)
உரம்பற்றி இரணியனை உகிர்நுதியால் ஒள்ளியமார் புறைக்க வூன்றி
சிரம்பற்றி முடியிடியக் கண்பிதுங்க வாயலரத் தெழித்தான் கோயில்
உரம்பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடிபோல் உயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ண ரங்கமே.
(420)
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூவுருவி லிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பாங்
கோயில் சேவலொடு பெடையன்னம் செங்கமல மலரேறி ஊச லாடி
பூவணைமேல் துதைந்தெழுசெம் பொடியாடி விளையாடும் புனல ரங்கமே.
(421)
செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செய்யும் நாந்தக மென்னும்
ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கை யாளன்
இரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழுலகப் பெரும்புர வாளன்
திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவ ரங்கமே.
(422)
கைந்நாகத் திடர்கடிந்த கனலாழிப் படையுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம் திருப்ப தியின்மேல்
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்ததமி ழுரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமா னிணையடிக்கீழ் இணைபிரியா திருப்பர் தாமே.
