(402)
மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்கும்
போதில்வைத்த தேன்சொரியும் புனலரங்க மென்பதுவே.
(403)
பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே.
(404)
மருமகன்தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்
திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை
பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே.
(405)
கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்வாய்க் கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே.
(406)
பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை
உருவரங்கப் பொருதழித்துஇவ் வுலகினைக்கண்
பெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ்
திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே.
(407)
கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே
ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே.
(408)
கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய
பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்
தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே.
(409)
வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்
எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி
மல்லிகைவெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே.
(410)
குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல்
குரைகடல்போல் நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே.
(411)
பருவரங்க ளவைபற்றிப் படையாலித் தெழுந்தானை
செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு
இருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே.
