(3528)
பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?,
நன்னலப் புள்ளினங்காள். வினையாட்டியேன்நானிரந்தேன்,
முன்னுல கங்களெல்லாம் படைத்தமுகில்வண்ணன்கண்ணன்,
என்னலங் கொண்டபிரான் தனக்கென் நிலைமையுரைத்தே?
(3529)
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து,
நெய்யம ரின்னடிசில் நிச்சல்பாலோடு மேவீரோ,
கையமர் சக்கரத்தென் கனிவாய்ப்பெரு மானைக்கண்டு
மெய்யமர் காதல்சொல்லிக் கிளிகாள்!விரைந் தோடிவந்தே?
(3530)
ஓடிவந் தென்குழல்மேல் ஒளிமாமல ரூதீரோ,
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறெழ செற்றபிரான்,
சூடிய தண்டுளவ முண்டதூமது வாய்கள்கொண்டே?
(3531)
தூமது வாய்கள்கொண்டு வந்தென்முல்லைகள் மேல்தும்பி காள்,
பூமது வுண்ணச்செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற,
மாமது வார்தண்டுழாய் முடிவானவர் கோனைக்கண்டு,
யாமிது வோதக்கவா றென்னவேண்டும்கண் டீர்நுங்கட்கே.
(3532)
நுங்கட்கி யானுரைக்கேன் வம்மின்யான்வளர்த் தகிளிகாள்,
வெங்கட்புள் ளூர்ந்துவந்து வினையேனைநெஞ் சம்கவர்ந்த,
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச்செழுங் கற்பகத்தை,
எங்குச்சென் றாகிலும்கண் டிதுவோதக்க வாறென்மினே.
(3533)
என்மின்னு நூல்மார்வ னென்கரும்பெரு மானென்கண்ணன்,
தன்மன்னு நீள்கழல்மேல் தண்டுழாய்நமக் கன்றிநல்கான்,
கன்மின்க ளென்றும்மையான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,
சென்மின்கள் தீவினையேன் வளர்த்தசிறு பூவைகளே.
(3534)
பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்,
யாவையும் யாவருமாய் நின்றமாயனென் ஆழிபிரான்,
மாவைவல் வாய்பிளந்த மதுசூதற்கென் மாற்றம்சொல்லி,
பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.
(3535)
பாசற வெய்தியின்னே வினையேனெனை யூழிநைவேன்?,
ஆசறு தூவிவெள்ளைக் குருகே! அருள் செய்யொருநாள்,
மாசறு நீலச்சுடர் முடிவானவர் கோனைக்கண்டு,
ஏசறும் நும்மையல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.
(3536)
பேர்த்துமற் றோர்களைகண் வினையாட்டியேன் நானொன்றிலேன்,
நீர்த்திரை மேலுலவி யிரைதேரும்பு தாவினங்காள்,
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன்விண்ணவர் கோனைக்கண்டு,
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர்வைகல் வந்திருந்தே.
(3537)
வந்திருந் தும்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்,
அந்தர மொன்றுமின்றி யலர்மேலசை யுமன்னங்காள்,
என்திரு மார்வற்கென்னை யின்னாவாறிவள் காண்மினென்று,
மந்திரத் தொன்றுணர்த்தி யுரையீர்வைகல் மறுமாற்றங்களே.
(3538)
மாற்றங்க ளாய்ந்துகொண்டு மதுசூதபி ரானடிமேல்,
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன,
தோற்றங்க ளாயிரத்துள் இவையுமொரு பத்தும்வல்லார்,
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.
