(2112)
புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,
அரியுருவும் ஆளுருவுமாகி, – எரியுருவ
வண்ணத்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால்,மற்
றெண்ணத்தா னாமோ இமை?
(2113)
இமையாத கண்ணால் இருளகல நோக்கி,
அமையாப் பொறிபுலன்க ளைந்தும் – நமையாமல்,
ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய்
நாகத் தணையான் நகர்.
(2114)
நகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல்
பகர மறைபயந்த பண்பன், – பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்,
அந்தியா லாம்பனங் கென்?
(2115)
என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில்
முன்னொருவ னாய முகில்வண்ணா, – நின்னுருகிப்
பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலைதந்த ஆறு?
(2116)
ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,
கூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி,
நெடியோய் அடியடைதற் கன்றே,ஈ ரைந்து
முடியான் படைத்த முரண்?
(2117)
முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம்
தரணி தனதாகத் தானே – இரணியனைப்
புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ
மண்ணிரந்து கொண்ட வகை?
(2118)
வகையறு நுண்கேள்வி வாய்வார்கள், நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, – திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர்.
(2119)
ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,
பேர எறிந்த பெருமணியை, – காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்
என்னென்ற மால திடம்.
(2120)
இடந்தது பூமி எடுத்தது குன்றம்,
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, – கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,
பேரோத வண்ணர் பெரிது.
(2121)
பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ
வெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில்
மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்
கோன்வீழ கண்டுகந்தான் குன்று.