(2116)

(2116)

ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,

கூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி,

நெடியோய் அடியடைதற் கன்றே,ஈ ரைந்து

முடியான் படைத்த முரண்?

 

பதவுரை

ஆறிய அன்பு இல்

நிரம்பின பக்தியில்லாதவர்களாய்

அடியார்

சேஷத்வஜ்ஞாநமாத்திரத்தை யுடையராயிருப்பவர்கள்

தம் ஆர்வத்தால்

தங்களுடைய ஸ்நேஹத்தாலே

கூறிய

சொல்லும் வார்த்தைகளை

குற்றம் ஆ

குற்றமாக

நீ கொள்ளல்

நீ கொள்ளாதே;

(அது ஏனெனில்)

ஈர் ஐந்து முடியான்

பத்துத்தலைகளையுடையனானராவணன்.

படைத்த

புத்திபூர்வகமாகப் பண்ணின

முரண்

தப்புக்காரியமானது

நெடியோய்

பெருமை பொருந்திய உன்னுடைய

அடி

திருவடிகளை

தேறி அடைதற்கு அன்றே

தெளிந்துவந்து (காலக்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் யசோதைபிராட்டியினுடைய ஒப்புயர்வற்ற அன்பை அநுஸந்தித்த ஆழ்வார்க்குத் தாம்போல்வாருடைய அன்பு ஒரு அன்பாகவே தோற்றவில்லை; கம்சன் முதலானாருடைய பிராதிகூல்யத்தோடு ஸமமாகவே தம்முடைய அன்பை நினைக்கலாயினர்;

அதனால் சிறிது கலக்கமுற்ற ஆழ்வார் “ மிகக் கொடியனான இராவணனிடத்திலிருந்த பிராதி கூல்யமே, அவன்றானே சிசுபாலனாகப் பிறந்த பிறவியில் உன்னடிச் சேர்வதற்கு அநுகூலமாகப் பலித்ததே!; அப்படியிருக்க; என் போல்வாரிடத்துள்ள போலியான ஆநுகூல்யம் [அன்பு] அநுகூலமாவதற்குத் தடையுண்டோ? என்று தமக்குத்தாமே தேறிக்கூறுகின்ற பாசுரம் இது.

“ஆறியவன்பிலடியார்” என்று தம்மையே சொல்லிக்கொள்ளுகிறார்போலும்! தன்மையில் வந்த படர்க்கை! கூறிய= பலவிபால் வினையாலணையும் பெயர்; கூறியவற்றை யென்று பொருள் . கொள்ளல் – எதிர்மறை வியங்கோள்வினைமுற்று. நெடியோய் –முன்னிலையொருமை வினையாலணையும் பெயர்; ஆறாம்வேற்றுமைத்தொகை. முரண் – கோணலான காரியங்கள். தேறி என்னும் வினையெச்சத்தை முன்னடிகளிற் கூட்டியுமுரைக்கலாம், பின்னடிகளிற் கூட்டுயுமுறைக்கலாம்.

 

English Translation

With Love and devotion, what words your devotees speak are faultless praise for you.  Is it not the path to attain your feet? O Ancient Lord who destroyed the ten-headed foe!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top