மூன்றாந் திருமொழி
(1668)
கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும்,
திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர
வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே.
(1669)
அரிவிரவு முகிற் கணத்தா னகில்புகையால் வரையோடும்
தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும்,
வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண்,
கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே.
(1670)
துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம்
திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும்
பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த
செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே.
(1671)
கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில்,
திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும்
புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே.
(1672)
வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள்
தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும்
தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட,
வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே.
(1673)
மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம்,
திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும்,
அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால்,
உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.
(1674)
வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும்,
எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும்,
உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.
(1675)
கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும்,
வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா,
செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே.
(1676)
வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை,
சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும்,
பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல்
பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே.
(1677)
தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்
வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன்,
காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை,
நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே.
