மூன்றாந் திருமொழி
(23)
சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே.
(24)
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுத லீர்வந்து காணீரே.
(25)
பணைத்தோ ளிளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்தஇப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின் றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.
(26)
உழந்தாள் நறுநெய் ஒரோதடா வுண்ண
இழந்தா ளெரிவினா லீர்த்துஎழில் மத்தின்
பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலை யீர்வந்து காணீரே.
(27)
பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்தஇப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான்
குறங்கு களைவந்து காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.
(28)
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ்நகை யீர்வந்து காணீரே.
(29)
இருங்கை மதகளிறு ஈர்க்கின் றவனை
பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடுபர மன்தன்
நெருங் குபவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுத லீர்வந்து காணீரே.
(30)
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறுபோல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்று மழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளியிழை யீர்வந்து காணீரே.
(31)
அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து
பதறப் படாமே பழந்தாம்பா லார்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளிவளை யீர்வந்து காணீரே.
(32)
பெருமா வுரலில் பிணிப்புண் டிருந்துஅங்கு
இருமா மருதம் இறுத்தஇப் பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்பு இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
(33)
நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே.
(34)
மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே.
(35)
வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.
(36)
எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச்
செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
(37)
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே.
(38)
விண்கொ ளமரர்கள் வேதனை தீரமுன்
மண்கொள் வசுதேவர் தம்மக னாய்வந்து
திண்கொ ளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர்வந்து காணீரே.
(39)
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளிமணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண்முலை யீர்வந்து காணீரே.
(40)
மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
(41)
முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்
சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே நேரிழை யீர்வந்து காணீரே.
(42)
அழகிய பைம்பொன்னின் கோல்அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்துஎங்கு மார்ப்ப
மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.
(43)
சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன
திருப்பாத கேசத்தைத் தென்புது வைப்பட்டன்
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே.
