இரண்டாந் திருமொழி
(3132)
முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,
அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,
வெந்நாள்நோய் வீய வி னைகளைவேர் அறப்பாய்ந்து,
எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே?
(3133)
வன்மா வையம் அளந்த எம் வாமனா,நின்
பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,
தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து,
நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ?
(3134)
கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்,
எல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய்,
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா,
சொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே.
(3135)
சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும்
ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்,
தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்
வாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே!
(3136)
வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,
சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,
கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்,யானுன்னை எங்குவந் தணுகிற்பனே?
(3137)
கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்,
அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்
நற்பொற்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே?
(3138)
எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி,
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற,
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே?
(3139)
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்,
ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,
பாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே,
கூவுகின்றேன் காண்பான் எங்கொய்தக் கூவுவனே?
(3140)
கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன்,
மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்,
தாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே?
(3141)
தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்,
அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல,
கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு,
நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே.
(3142)
உயிர்க ளெல்லா உலகமு முடையவனை,
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும்,
உயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே.
