ஒன்பதாந் திருமொழி
(3099)
எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்
செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே,
அம்மாவடியென் வேண்டுவதீதே.
(3100)
இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என்
மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்,
எய்தாநின்கழல் யானெய்த, ஞானக்
கைதா காலக்கழிவுசெய்யேலே.
(3101)
செய்யேல் தீவினையென் றருள் செய்யும்,என்
கையார்ச்சக்கரக் கண்ணபிரானே,
ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்
எய்யாதேத்த, அருள்செய்யெனக்கே.
(3102)
எனக்கே யாட்செய் யெக்காலத்து மென்று,என்
மனக்கே வந்திடை வீடின்றி மன்னி,
தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே,
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.
(3103)
சிறப்பில்வீடு சுவர்க்கம் நரகம்,
இறப்பிலெய்துக வெய்தற்க, யானும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமானை,
மறப்பொன்றின்றி யென்றும் மகிழ்வேனே.
(3104)
மகிழ்கொள் தெய்வ முலோகம் அலோகம்,
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே,
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும்
மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே.
(3105)
வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்,
பேராதேயான் வந்தடையும்படி
தாராதாய், உன்னையென்னுள்வைப்பிலென்றும்
ஆராதாய், எனக்கென்றுமெக்காலே.
(3106)
எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்,
மிக்கார்வேத விமலர்விழுங்கும், என்
அக்காரக்கனியே, உன்னையானே.
(3107)
யானேயென்னை அறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே.
(3108)
ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை,
நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி,
தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை,
வேறேபோக எஞ்ஞான்றும்விடலே.
(3109)
விடலில் சக்கரத் தண்ணலை,மேவல்
விடலில் வண்குருகூர்ச் சடகோபன்சொல்,
கெடலி லாயிரத்துள் ளிவைபத்தும்,
கெடலில் வீடுசெய்யும் கிளர்வார்க்கே.
