ஏழாந் திருமொழி
(1908)
மான முடைத்துங்க ளாயர் குலமத னால்பிறர் மக்கள் தம்மை
ஊன முடையன செய்யப் பெறாயென் றிரப்ப னுரப்ப கில்லேன்
நானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நானென் செய்கேன்?
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர்கடை கின்றான் போலும்.
(1909)
காலை யெழுந்து கடைந்தவிம் மோர்விற்கப் போகின்றேன் கண்டே போனேன்,
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால் மற்றுவந் தாரு மில்லை,
மேலை யகத்துநங் காய் வந்து காண்மின்கள் வெண்ணெ யேயன்று, இருந்த
பாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன் என்செய்கேன் என்செய் கேனோ.
(1910)
தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள் உறி மேலைத் தடாநி றைந்த,
வெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயை வாரி விழுங்கி யிட்டு,
கள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள் கையெல் லாம்நெய்,வயிறு
பிள்ளை பரமன்றுஇவ் வேழுல கும்கொள்ளும் பேதையேன் என்செய் கேனோ.
(1911)
மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற வளைவண்ண நன்மா மேனி,
தன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது அவனி வைசெய் தறியான் பொய்ந்நம்பி
புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்ற வாதவழ்ந் திட்டு,
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை என்செய்கேன் என்செய் கேனோ.
(1912)
தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன் தோழிமா ராரு மில்லை,
சந்த மலர்க்குழ லாள்தனி யேவிளை யாடு மிடம்கு றுகி,
பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்,
நந்தன் மதலைக்கிங் கென்கட வோம்?நங்காய் என்செய்கேன் என்செய் கேனோ.
(1913)
மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை,
அண்ணல் இலைக்குழ லூதிநம் சேரிக்கே அல்லிற் றான்வந்த பின்னை,
கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக் கமலச் செவ்வாய்வெ ளுப்ப,
என்மகள் வண்ண மிருக்கின்ற வாநங்காய் என்செய்கேன் என்செய் கேனோ.
(1914)
ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென் றாயர் விழவெ டுப்ப,
பாசனம் நல்லன பண்டிக ளால்புகப் பெய்த அதனை யெல்லாம்,
போயிருந் தங்கொரு பூத வடிவுகொண் டுன்மக னின்று நங்காய்,
மாயன் அதனையெல் லாம்முற்ற வாரி வளைத்துண் டிருந்தான் போலும்.
(1915)
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர் ஓர்க்குடன் துற்றிடு மென்று,
ஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற் கெள்கி யிவனை நங்காய்
சோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய் என் றிரப்பன் உரப்ப கில்லேன்,
பேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப் பேசுவ தஞ்சு வேனே.
(1916)
ஈடும் வலியும் உடையவிந் நம்பி பிறந்த ஏழு திங்களில்,
ஆடலர் கண்ணியி னானை வளர்த்தி யமுனை நீராடப் போனேன்,
சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடி யால்,மலை போல
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவ தஞ்சு வேனே.
(1917)
அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யைப்,
பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற பாகந் தான்வை யார்களே,
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை,
நெஞ்சத் திருப்பன செய்துவைத் தாய்நம்பீ என்செய்கே னென்செய் கேனோ.
(1918)
அங்ஙனம் தீமைகள் செய்வர்க ளோநம்பீ ஆயர் மடமக் களைப்,
பங்கய நீர்குடைந் தாடுகின் றார்கள் பின்னே சென்றொளித் திருந்து,
அங்கவர் பூந்துகில் வாரிக்கொண் டிட்டர வேரி டையா ரிரப்ப,
மங்கைநல் லீர்வந்து கொண்மின் என்றுமரம் ஏறி யிருந்தாய் போலும்.
(1919)
அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக் காண்மை யும்சே வகமும்,
உச்சியில் முத்தி வளர்த்தெடுத் தேனுக் குரைத்திலன் தானின் றுபோய்,
பச்சிலைப் பூங்கடம் பேறி விசைகொண்டு பாய்ந்து புக்கு,ஆ யிரவாய்
நச்சழல் பொய்கையில் நாகத்தி னோடு பிணங்கிநீ வந்தாய் போலும்.
(1920)
தம்பர மல்லன் ஆண்மைக ளைத்தனி யேநின்று தாம்செய் வாரோ?
எம்பெரு மான் உன்னைப் பெற்ற வயிறுடை யேனினி யானென் செய்கேன்?
அம்பர மேழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்க ணுடை
வம்பவிழ் கானத்து மால்விடை யோடு பிணங்கிநீ வந்தாய் போலும்.
(1921)
அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித் தஞ்ச அருவரை போல,
மன்னு கருங்களிற் றாருயிர் வவ்விய மைந்தனை மாக டல்சூழு,
கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க்கலி கன்றி
இன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க் கேது மிடரில் லையே.
