(2508)
இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்
அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம்,அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.
(2509)
மேகங்களோ உரையீர் திருமால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்து நன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள்பெற்றதே?
(2510)
அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர், ஈங்கோர்பெண்பால்
பொருளோ எனுமிகழ் வோஇவற் றின்புறத் தாளென்றெண்ணோ?
தெருளோம் அரவணை யீர்இவள் மாமை சிதைக்கின்றதே.
(2511)
சிதைக்கின்ற தாழியென் றாழியைச் சீறிதன் சீறடியால்
உதைக்கின்ற நாயகந் தன்னொடும் மாலே, உனதுதண்தார்
ததைக்கின்ற தண்ணந் துழாயணி வானது வேமனமாய்ப்
பதைக்கின்ற மாதின் திறத்துஅறி யேஞ்செயற் பாலதுவே.
(2512)
பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக் கொண்டு, பகலிழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை, உலகளந்த
மால்பால் துழாய்க்கு மனமுடை யார்க்குநல் கிற்றையெல்லாம்
சோல்வான் புகுந்து,இது வோர்பனி வாடை துழாகின்றதே.
(2513)
துழாநெடுஞ் சூழிரு ளென்றுதன் தண்தா ரதுபெயரா
எழாநெடு வூழி யெழுந்தவிக் காலத்தும், ஈங்கிவளோ
வழாநெடுந் துன்பத்த ளென்றிரங் காரம்ம னோஇலங்கைக்
குழாநெடு மாடம், இடித்த பிரானார் கொடுமைகளே!
(2514)
கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.
(2515)
கடமா யினகள் கழித்து,தம் கால்வன்மை யால்பலநாள்
தடமா யினபுக்கு நீர்நிலை நின்ற தவமிதுகொல்,
குடமாடி யிம்மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்து
நடமா டியபெரு மான்உரு வொத்தன நீலங்களே.
(2516)
நீலத் தடவரை மேல்புண்ட ரீக நெடுந்தடங்கள்
போல,பொலிந்தெமக் கெல்லா விடத்தவும், பொங்குமுந்நீர்
ஞாலப் பிரான்விசும் புக்கும் பிரான்மற்றும் நல்லோர்பிரான்
கோலம் கரிய பிரான்,எம் பிரான்கண்ணின் கோலங்களே.
(2517)
கோலப் பகற்களி றொன்றுகற் புய்ய, குழாம்விரிந்த
நீலக்கங் குற்களி றெல்லாம் நிறைந்தன, நேரிழையீர்!
ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே
ஏலப் புனைந்தென்னை மார்,எம்மை நோக்குவ தென்றுகொலோ
