(2513)
துழாநெடுஞ் சூழிரு ளென்றுதன் தண்தா ரதுபெயரா
எழாநெடு வூழி யெழுந்தவிக் காலத்தும், ஈங்கிவளோ
வழாநெடுந் துன்பத்த ளென்றிரங் காரம்ம னோஇலங்கைக்
குழாநெடு மாடம், இடித்த பிரானார் கொடுமைகளே!
பதவுரை
| துழா நெடு சூழ் இருள் என்று |
– |
(கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேட வேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு) |
| எழா நெடு ஊழி எழுந்த |
– |
(முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின. |
| இக்காலத்தும் |
– |
இச்சமயத்திலும் |
| ஈங்கு இவளோ |
– |
இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ |
| தம தண் தார் அது பெயர் ஆ |
– |
நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக (துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக்கொண்டு) |
| வழா நெடு துன்பந் தன் |
– |
தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன் |
| என்று |
– |
என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு |
| இரங்கார் |
– |
(தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை; |
| அம்மனோ |
– |
அந்தோ! |
| இலங்கை |
– |
இலங்காபுரியிலுள்ள |
| குழாம் |
– |
கூட்டமான |
| நெடுமாடம் |
– |
பெரிய மாளிகைகளை |
| இடித்த |
– |
(தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின |
| பிரனார் |
– |
தலைவருடைய |
| கொடுமைகளே |
– |
கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தோழியானவள் நாயகனுடைய கொடுமையைக் கூறும் பாசுரமிது. கீழ்ப்பாட்டில் சந்தியா காலமும் வாடையும் ஹிம்ஸித்தவாறு சொல்லிற்று; அதற்குமேல் இருள் வந்து தோன்றிற்று. வாடையும் இராத்திரியும் ‘நான் முன்னே அழிக்கிறேன். நான் முன்னே அழிகிறேன் என்று சொல்வனபோல வந்து நவிகிறபடி. ஒரு ராத்ரிதானே பல யுகங்களாகத் தோன்றி வருத்தத்தை மிகுவிக்கிற இக்காலத்திலும் இவளது தன்மையை அறிந்து வைத்தும் இரக்கங்கொண்டு வந்து உதவாதவர் மிகக் கொடியவர் என்கிறாள்.
அம்மனோ = ஐயோ! என்பதுபோல; கொடுமைக்கு அஞ்சிக் கூறிய வார்த்தை பிரித்து தனியே நிற்கின்ற இத்தலைவிக்கு இருட் பொழுது நெடிதாகு மென்றும், இவள் பிரிவு பொறுக்கமாட்டாத தன்மையையுடையவனென்றும், திருத்துழாய் மாலையையாகிலும் பெற்றால் ஒருவாறு தரிக்கலாமென்று அதனையே விடாது வாய் பிதற்றும்படி ஆற்றாமை விஞ்சியதென்றும், அவ்வாற்றாமை வேறெரு விதத்தாலும் தணியாதென்றும் இங்ஙனம் இங்குகைக்குப் பல காரணங்களிருக்க, இவை கண்டு இரங்காமை தனித்தனியே கொடுமை என்பது தோன்ற, ‘கொடுமைகள், எனப்பன்மையாகக் கூறிற்று. முன்பு ஒரு பிராட்டியின் ஆற்றாமைக்கு இரங்கி அது தீர்ப்பதற்காக இலங்கையையழித்து உதவினர். இப்பொழுது அவ்வியல்புமாறி இவள் கிறத்துக் கொடியான்படி எங்ஙனே! யென்பான் ‘இலங்கைக்குழ நெடுமாட்மிடித்த பிரானார் கொடுமைகளே!’ என்றாள். திருவரங்கக் கலப்பகத்தில் “கடல் வழிவிட நிசிசரர் பொடிபட விருகண் சீறி, வடகயிலையிலெழுவிடை தழுவியது மறந்தாரோ, அடலராலமளியிலறிதுயிலமரு மாங்கேசர், இடர்கெட வருகிலர் முருகலர் துளவுமிரங்காரே” – என்றது இங்கு அறியத்தக்கது. அன்றி, அப்பொழுது பிராட்டி பக்கல் இரக்கத்தாலன்று இலங்கையை யழித்தது; துஷ்ட நிக்ரஹஞ் செய்து தமது ப்ரபுத்வத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டாகவே யென்பது தோன்ற இங்ஙனங் கூறினாளுமாம்.
இங்கே பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானங்காண்மின்:- “ஒருத்திக்காக கடலையடைத்து ராமனென்றும் லக்ஷ்மணனென்றும் எழுத்து வெட்டின அம்புகளைப் புகவிட்டுக் குட்டிச்கூரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடியே போகப்பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மையெல்லாம் எங்கே குடிபோய்ந்தோ என்கிறாள் என்று எம்பார் அருளிச் செய்வர்; * இதுவும் அழகிதொன்று உண்டாயிருக்கலாகாதென்று அஸூயையாலே அழித்தானித்தனைகாண்; ஒருத்திக்காக உதவினவனல்லன்காண் என்கிறாள் என்று திருமலைநம்பி.”
துழா என்பதற்கு- (பிரிந்த நாயகியின் உயிரைக்) கையிட்டுத் தேடுகின்ற என்றும் பொருளுரைக்கலாம். சூழ் இருள்- தப்பவேண்டுமென்று முயன்றாலும் தப்பவொண்ணாத இருள். தண்டாரது பெயரா வழாநெடுந்துன்பத்தன்’ என்று அந்வயிக்கும் திருத்துழாய் மாலை நிமித்தமாகத் துன்பப்படுகின்றவள் என்றவாறு, அன்றியே, ‘தண்டாரது பெயர் ஊழியெழுந்த’ என்று அந்வயித்து- இவள் நாயகனது தாரை விரும்பினது வியாஜமாக (இவளை வருத்துதற்கு) இருளொன்றொரு தோற்றின இவ்வளவிலும் என்று முரைக்கலாம்.
இருளென்று ஊழியெழுந்த இக்காலம் = வருகிறபொழுது ஒரு ஸந்யாஸியாய்க் கிட்டினபொழுது இராவணனானாற்போல வருகிறபொழுது ஓரிருளாய்க் கிட்டினபொழுது பல கல்பமாகுங்காலம் என்க. இரங்கார் = இராமபிரான் மோதிரத்தைக் கொடுத்து அனுமானைப் பிராட்டியினரிடம் தூதனுப்பியதுபோல, தமது திருத்துழாயைக் கொடுத்து ஓராளைத் தூது விடுதலுஞ் செய்திலர் என்கிறான். இரக்கமாவது- பிறர் துன்பம் பொறுக்கமாட்டாமை. ‘நெடு ஊழி’ என்றதற்கு- ‘கல்பத்துக்கும் ஓர் எல்லையுண்டு. அதவுமில்லை இதுக்கு’ என்று விசேஷார்தங் கூறுவர். பிரளய காலத்திலே வந்து முகங்காட்டி ரக்ஷிக்குமவன் இக்காலத்திலும் முகங்காட்டா திருக்கலாமோ? என்பதுதோன்ற, ‘இக்காலத்தும்’ எனப்பட்டது.
இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது:- காலம் வாய்த்த விடத்தும் பலன் கை புகப் பெறாத ஆழ்வார்க்கு உண்டான ஆற்றாமைமிகுதியைக்கண்ட அன்பவர்கள் எம்பெருமானுக்கு அருளில்லையோ வென்று சங்கித்துக் கூறுதலாம். ‘துழா நெடுஞ்சூழிரு ளென்று எழா நெடுவூழியெழுந்த விக்காலத்தும்’ என்றதனால் கால விளம்பம் ஸஹிக்கமாட்டாமையால் மோஹாதந்தகாரத்தை உண்டு பண்ணுகிற காலம் இவர்க்கு நீட்டித் தோன்றுகிறதென்பது தெரிகின்றது. “ஈங்கிவனோ தம் தண்டாரது பெயரா வழா நெடுந்துன்பத்களென்றிரங்கார்” என்றதனால், இந்த இருள் தருமா ஞானலத்திலே தமது துன்பத்தைத் தாம் தீர்த்துக்கொள்ளும் சக்தியற்ற இவ்வாழ்வார் நமது போக்யதையைக் கூறிக்கொண்டு அது பெறாத காரணமாக மிக வருந்துவரென்று திருவுள்ளம்பற்றி எம்பெருமான் கருணை செய்திலனென்பது தெரிவிக்கப்படுகின்றது: இலங்கைக் குழா நெடுமாடமிடித்த பிரானார் கொடுமைகளே. என்றதனால், உலகமுழுவதும் உஜ்ஜீவிக்கும் பொருட்டுத் திருவவதரித்து துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பிரிபாலனஞ் செய்தருளியவர் இவ்வொருவர் பக்கல் இரங்காதிருக்கிற கொடுமை என்னே! என்பது தோன்றும். இப்பாட்டை நாயகியின் வார்த்தையாகவும் கொள்ளலாம்; அப்போது ஆழ்வார் வார்த்தையாக ஸ்வாபதேசத்தில் கொள்க.
துழா – ‘துழாவு’ என்பதன் விகாரம் ‘துழாம்’ எனப்பிரித்து ‘துழாவும்’ என்னுஞ் செய்யுமெனச்சத்து ஈற்றுயிர் மெய்கெட்ட தென்றலுமொன்று. ‘தாரது’ என்பதில் அது- பகுதிப்பொருள் விகுதி. எழா- எழாத, வழா- வழாது, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள். அம்மனோ- இடைச்சொல்; வடமொழியில் ‘அஹஹ!’ என்னுமாபோல…
English Translation
The lord who destroyed the fortressed Lanka does not give his coal-Tulasi garland, This night of darkness stretches into eternity. His heart does not move to pity saying, “Oh, this girl is suffering this is no place for her to be”, Alas, the terrible ways!
