(2511)

(2511)

சிதைக்கின்ற தாழியென் றாழியைச் சீறிதன் சீறடியால்

உதைக்கின்ற நாயகந் தன்னொடும் மாலே, உனதுதண்தார்

ததைக்கின்ற தண்ணந் துழாயணி வானது வேமனமாய்ப்

பதைக்கின்ற மாதின் திறத்துஅறி யேஞ்செயற் பாலதுவே.

பதவுரை

மாலே

எம்பெருமானே
ஆழி

கூடல் வட்டமானது
சிதைக்கின்றது

காரியத்தைக் கெடுக்கின்றது
என்று

என்ற காரணத்தினால்
ஆழியை

அக்கூடல் வட்டத்தை
சீறி

கோபித்து
தன் சிறுஅடியால்

தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற

உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது

உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற

வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய்

குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான்  அதுவே மனம் ஆய்பதைக்கின்ற

சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து

இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது

செய்யததக்கதை
அறியேன்

யான் அறிகின்றிலேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கூடலிழைத்து வருந்தாநின்ற தலைவியின் நிலையைப் பாங்கி தலைவனுக்கு உணர்த்துவதாம் இது. நாயகனான எம்பெருமானைக் கூடுகைக்குக் கூடவிழைத்து அது கலங்குகையாலே நோவுபடுகிற  நாயகியின் வருத்தத்தைக் கண்டு தோழி கலங்கி யுரைக்கின்றாள் என்க. கூடலிழைத்தலாவது- நாயகனைப் பிரிந்த நாயகி கூடல் தெய்வத்தை வாழ்ததி மணலில் வட்டமாக ஒரு கோடு  கீறி அதனுட் சுழிசுழியாகச் சுற்றுஞ் சுழித்து இரண்டிரண்டாகக் கணக்கிட்டு அக்கணக்கு இரட்டைப் பட்டால் பிரிந்த தலைவர் வந்து கூடுவாரென்றும் ஒற்றைப்பாட்டால் வந்து கூடாதென்றும் குறி பார்ப்பதொரு ஸம்ப்ரதாயம். நாச்சியார் திருமொழியில் “தெள்ளியார் பலர் கைதொழுந்தேவனார்” என்னுந் திருமொழியில் ஆண்டாள் *கூடலிழைப்பது காண்க. அவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அரும்பதவுரையில் “கூடலாவது- வட்டமாகக் கோட்டைக் கீறி அதுக்குள்ளே சுழி சுழியாகச் சுற்றுஞ் சுழித்து இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால் இரட்டைப் பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்று ஸங்கேதம்” என்றுரைக்கப்பட்டுள்ளது. திருக்கோவையாரின் (186.) “ஆழிதிருந்தும் புலியூருடையான் அருளினளித்து ஆழிதிருத்தும் மணற்குன்றினித் தகன்றார் வருகென்று, ஆழிதிருத்திச் சுழிக்கணக்கோதி நையாமல் ஐய, வாவிதிருத்திததாக்கிற்றியோ உள்ளம் வள்ளலையே” என்ற செய்யுளில் ‘ஆழிதிருந்திச் சுழிக்கணக்கோதி’ என்றதும் இல்லை.

ஆழி சிதைக்கின்ற தென்று = அது காரியத்தைக் கெடுத்தலாவது சுழிக்கணக்கில் ஒற்றையாய்க் கூடாமையைக் குறித்தல்; இதுவே, கலங்குதலென்றும் பிழைத்தலென்றும் தவறுதலென்றும் கூடாமை யென்றும் சிதறுதலென்றும் கூறப்படும். இரட்டையாய்க் கூடுதலைக் குறித்தல் காரியத்தை அநுகூலிக்கச் செய்தலாம். அது, கூடுகலெனப்படும். இனி, கூடலிழைத்தாவது- கண்களை மூடிக்கொண்டு தரையில் வட்டமாக ஒருகோடு கீறி விட்டுப் பின்பு கண் திறந்து பார்த்து அது தொடங்கிய விடத்தில் தவறாது வந்து  கூடியிருக்குமாயின் பிரிந்த தலைவன் தன்னை வந்து கூடுவானென்றும் அங்ஙனம் வந்து கூடாமல் விலகியிருக்குமாயின் தலைவன் வந்து கூடானென்றும் குறிபார்த்தல் என்றும் சிலர் கூறுவராம். அங்ஙனம் இலக்கணங் கொள்வதற்கு மேற்கோள் கிடைப்பரிது. பிரிந்தார் இரங்குவது செய்தல் நிலத்திலே யாகையாலே, இது கடற்கரையிலே நிகழும்.

“சிதைக்கின்ற தாழியென்று அதனைச் சீறி” என்னவேண்டியிருக்க ‘ஆழியைச் சீறி’ என்றது பெரியார் பிரயோக முறைமையிற் பொருந்தும்: ‘ஆழியை’ என்றது அதனையெனச் சுட்டுப்பெயர் மாத்திரமாய் நின்றதெனக் கெடுப்பதாகச் சொன்னது தன் காரியம் கைகூடாமையைப் புலப்படுத்தியவாறு. விருப்பத்தோடு கையால் அருமைப்பட்டு இழைத்த கூடல் வட்டத்தை வெறுப்புக்கொண்டு காலால் விரைவில் அழிக்கின்றளாம் தனது காரியம் கைகூடுமாறு குறி வரவில்லையென்பது பற்றி. அங்ஙனம் காலால் அழித்தலே ‘உதைக்கின்ற’ என்றதனால் தெரிவிக்கப்பட்டதாம்.

“நுதலடி முகப்பென மூவழிச் சிறுதி” (கலித்தொகை- முல்லைக்கலி-81) என்றபடி மாதர்கட்குப் பாதம் சிறுத்திருத்தல் நல்லிணக்கணமாதலால் சீறடி யெனப்படட்து. சிறுமை அடி, சீறடி. சிறுமை யென்னும் பண்புப்பெயர் ஈறுபோய் ஆதிநீண்டது. உதைக்கின்ற என்றபதற்கு ஏற்ப ‘சீறடி’ என்பது சீற்றங்கொண்ட அடி எனவும் ஒரு பொருள்படுகிற நயம் காண்க. ‘சீரடி’ என்ற பாடத்துக்கு அழகிய பாதமெனப் பொருள் காண்க. ‘நாயகன் தன்னோடு’ என்பது பாடமன்று; நாயகம் ‘தன்னோடு’ என்க. நாயகாமவது தலைமை. கூடல் வட்டத்தைச் சீறிக் காலாலுதைக்கும்படியான பெருமையோடு திருத்துழாய் மலரணிவதிலுண்டான ஆசைப் பெருங்கோடுங் கூடிய இவகுளள் திறந்து என்றவாறு.

தார் – பூ என்றும் பொருள்படுவதுண்டு; “மாலையு மலருங் கொடிப்படைப் பெயரும், கிண்கிணி மாலையுந் தாரெனக் கிளத்துப” என்பது பிங்கலந்தை. “தார்ததைக்கின்ற’ என்பதற்கு மாலையாகத் தொடக்கப்பட்ட’ என்று பொருள் கொள்ளவுந்தகும். அணிவான்- அணிவதற்காக என்று பொருள் படுதலால் எச்சம். பதைக்கின்ற- துடிக்கிற மாது என்றது மாதா என்பதன், விகாரமாய் விரும்பப்படும் அழகுடைய மகளைக் குறிக்கும். இங்கு “மாதின் திறத்து என்றது- இவ்வருத்தத்தை ஸஹிப்பதற்குத் தகாதவன் என்பதைக் காட்டும். ‘செயற்பாவது யானறியேன்’ என்றதனால் இவளைப் பதைப்பிக்கிற நீயே அதற்குப் பரிஹாரமும் அறிவாயி நின்றதாம்.

இப்பாட்டுக்கு ஸ்வரபதேசப் பொருளாவது- ஆற்றாமை விஞ்சின ஆழ்வார் எம்பெருமானைச் சேர்தற்கு நம்மாற் செய்யலாவ தொரு முயற்சி யுண்டோவென்று பார்த்து மது கூடாமையாலே பின்னும் வருந்துகிற தன்மையைக் கண்ட அன்பர்கள் அதனை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ் செய்வதாம். ஆழி சிதைக்கின்ற தென்று- நமது கையால் செய்யும் தொழில் முயற்சி பேற்றுக்குக் காரணமாகாதென்றறிந்து, ஆழியைச் சீறி- அவ்வபாயத்தைக் கைக்கொள்ளாது வெறுத்து, தன் சீறடியாலுதைக்கின்ற- (அவ்வுபாயத்தைக்) காற்கடைக் கொண்டு தள்ளிவிடுகிற, நாயகந்தன்னோடு- திறமையுடனே, உனது தண் தார்  ததைக்கின்ற தண்ணந் துழாயணிவானதுவே மனமாய் பதைக்கின்ற- உன்னுடைய இனிமையை அனுபவித்ததற்கு  அதிலே முற்றுங் கருத்தைச் செலுத்திக் கால விளம்பரத்தைப் பொறாமல் விரைந்து அற்றாமையால் வருந்கிற, மாதின் திறத்து- பரதந்திரரான இவ்வாழ்வார் பொருட்டாக, செயற்பாலது அறியேன் – செய்யத்தக்கது இன்னதென்று யாம் அறியோம்; நீயே அறிவை. யென்று கருத்து. மாலே! – ஞானம், சக்தி முதலிய எல்லாப் பெருமைக்குணங்களும் நிறைந்தவனே! என்று விளித்த்தனால் இப்படிப்படட் மஹாபுருஷனான நீ இவரை இன்னும் உன்பக்கற் சேர்த்துக் கொள்ளாமலிருப்பது தகுதியன்று என்றவாறு.

சிதைக்கின்றதாழி யென்றாழியைச் சீறித் தன் சீறடியாலுதைக்கின்ற, என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம். ‘ஆழி’  என்று கடலுக்கும் பெயராகையாலே அப்பொருளை ‘ஆழியை’ என்றவிடத்துள்ள ‘ஆழி’ என்பதற்குக் கொள்ளலாம்; தான் இழைக்கிற கூடல் வட்டத்தைக் (கடல்) கலைத்து விடுகிற தென்கிற காரணத்தினால் கடலைச் சினந்து காலால் உதைக்கின்ற என்றபடி. இங்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானங் காண்மின்;- அவன் வருமளவும் ஆறியிருக்க வொண்ணாமையாலே கூடலிழைக்கத் தொடங்கினான்; அது தப்பின படியைக் கண்டு நாயகன்றன்னைக் கண்டால் கோபிக்குமா போலே கூடலோடே கோபிக்கிறாள். முன்புளார், கூடலிழைக்கப் புக்கவாறே அது சிதறி வருகிறபடியைக் கண்டு அத்தோடே சீறி அழியா நின்றா ளென்பர்கள். பட்டர், இது கூடுகைக்கு ஏகாந்தமன்றியே பிரிகைக்கும் ஒருபுடையுண்டா யிருக்கையாலே சீறி யுதையா நின்றாளன்று; கூடலிழைக்கப் புக்கவாறே கடலானது தன் திரையாகிற கையாலே அழிக்கப் புக அத்தோடே சீறா நின்றானென்பர்.” என்று.

English Translation

O Adorable Lord! This girl draws circles in the sand with her toe and counts, then seeing the omens read ill, she angrily erases them with her  foot. Her heart is always set on wearing your cool Tulasi garland, she raves, I do not know what I can do for this girl.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top