(2512)
பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக் கொண்டு, பகலிழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை, உலகளந்த
மால்பால் துழாய்க்கு மனமுடை யார்க்குநல் கிற்றையெல்லாம்
சோல்வான் புகுந்து,இது வோர்பனி வாடை துழாகின்றதே.
பதவுரை
| பால் வாய் பிறை பிள்ளை |
– |
அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம் விறைச் சந்திரனாகிய பால்மாறத வாயையுடைய (தனது) இளங் குழந்தையை |
| ஒக்கலைகொண்டு |
– |
தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு |
| பகல் இழந்த மேல் பால் திசை பெண் |
– |
ஸூர்யனாகிய கணவனையிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண் |
| புலம்பு உறும் |
– |
வருந்தி அழப்பெற்ற மாலைப் பொழுதானது |
| உலகு அளந்த மால் பால் |
– |
உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள |
| துழாய்க்கு |
– |
திருத்துழாய்க்கு |
| மனம் உடையார்க்கு |
– |
ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு |
| நல்கிற்றை எல்லாம் |
– |
அருள் செய்த உதவியை முழுவதும் |
| சோல்வான் |
– |
கவர்ந்து கொள்ளும் பொருட்டு |
| புகுந்து |
– |
வந்து |
| இது ஓர் பணிவாடை |
– |
இந்தக் குளிர்ந்ததொரு காற்று. |
| துழாகின்றது |
– |
(என்மேல்) தடவுகின்றது; அந்தோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மாலைப் பொழுதுக்கு ஆற்றமாட்டாது வருந்தியிருக்குமிருப்பிலே அதற்கும் மேலாக வாடை வந்து வருத்த, அதற்குத் தலைமகள் இரங்கிக் கூறும் பாசுரமிது. வாடையாலுண்டாகிற வருத்தத்தின் மிகுதியை நோக்குமிடத்து மாலைப்பொழுதாலுண்டாகிய வருத்தம் இனிதென்று தோன்றுதலால், தலைவனைப் பிரிந்து அவனது ப்ரஸாதமான திருத்துழாயையாகிலும், பெற்றுத் தரிக்க ஆசைப்பட்ட ஸ்த்ரீகளுக்கு மாலைப்பொழுது பெய்த உதவியையெல்லாம் கொள்ள வந்து இவ்வாடை வீசுகின்றது என்கிறாள். மாலைப்பொழுதானது மற்றவற்றையெல்லாம் கொள்ளை கொண்டாலும் உயிரை மாத்திரமாவது கொள்ளாது விட்டது; இவ்வாடை அதனையும் மிச்சமில்லாதபடி கொண்டுபோக வந்ததென்கிறளென்க.
இதுவோர் பனிவாடை = ‘இது’ என்று சுட்டினது- அந்த வாடையின் கொடுமையை வாய்கொண்டு கூறமுடியாமல் கையால் குறித்துக் காட்டினபடி. ‘ஓர்வாடை’ என்றது- இதற்கு முன்புவந்த வாடைகள் போலன்றியே இது பெண்பிறந்தாரை மிக வருந்திப் புதியதாய் ஒப்பற்ற ஒருதுணை வேண்டாது தனியே வருகிறதொன்று என்றபடி. ‘பனிவாடை’ என்றது- முன்பு குளிர்ச்சியாயிருந்த நிலைமையைப் பற்றி; இப்போது வெவ்வாடையாயிருக்குமே. அன்றியே, பனி – (ஸ்த்ரீகளை) நடுங்குவிக்கிற, வாடை என்று உரைத்தலுமாம். துழாகின்றது- உயிருள்ளவிடத்தை நாடி மர்ம ஸ்தாந்திலே கைவைத்துத் தேடித் தடவுகின்றதென்கை. ஓர் வாடை புகுந்து துழாகின்றது- நிலாத்தோற்றம், மாலைப்பொழுது, கடலொலி என்னுமிவையெல்லாம் ஒருங்கு சேர்ந்தும் செய்யமாட்டாத ஹிம்ஸையை இவ்வாடை போன்றே வந்து செய்கின்றதென்கை.
நாயகனைப் பிரிந்து வருந்துகிற தனக்குக் கண்ணிற்படும் பொருளெல்லாம் தன்னைப் போலவே வருந்துகிறதாகத் தோன்றுதலால் ‘பகலிழந்த மேல்பால் திசைப்பெண் புலம்புறுமாலை’ என்றாள். இதனால் மாலைக்காலம் நாயகனைப்பிரிந்த ஸ்த்ரீகளை வகுத்துமென்று தோற்றுவிக்கப்பட்டதாயிற்று.
பால்வாய் என்ற விசேஷணத்தை உபமானமாகிய பிறைக்கும் உபமேயமாகிய பிள்ளைக்கும் ஆக இரண்டுக்குங் கூட்டுக.
ஒன்றரையடியால் மாலைப்பொழுதானது, உலகளந்த மால்பால் துழாய்க்கு மனமுடையார்க்கு கல்கிற்றை யெல்லாம் = உலகளந்த பெருமானிடத்துள்ள திருத்துழாய்க்கு ஆசைப்பட்டிருக்கிற நெஞ்சையுடைய ஸ்திரீகளுக்கு ஏதோ உதவி செய்திருப்பதாகவும், அந்த உதவி முழுவதையும் வாடைக்காற்றானது கவர்ந்துகொள்ளும் பொருட்டு வந்து துழாகின்றதாகவும் இங்குச் சொல்லப்படுகின்றதே, மாலைப்பொழுது என்ன உதவி செய்திருக்கின்றது! என்னில்; உயிரைக் கவர்ந்துகொண்டு போகாது விட்டதே. அது செய்த பேருதவியாகு மென்க. அது கொண்டு போகாமல் வைத்திட்ட உயிரையும் கொண்டுபோக வந்தது இவ்வாடை என்று இதன் கொடுமை சொல்லிற்றாயிற்று.
‘மனமுடையேற்கு’ என்று தன்மையாகச் சொல்லவேண்டுமிடத்து ‘மனமுடையார்க்கு என்றது, தம்மையே படர்க்கையாகக் கூறினதென்க. அன்றி, தம்போல்வாரைக் குறிப்பதுமாம். நல்கிற்றையெல்லாம்- ஒருமைப் பன்மை மயக்கம் . நல்கின்று- ஒன்றன்பால் இறந்த கால வினையாலணையும் பெயர். சோல்வான்- எச்சம். ‘சோர்வான்’ என்றும் பாடமுண்டு. துழாகின்றது- ‘துழாவுகின்றது என்பதன் விகாரம்.
எம்பெருமானைச் சேர்ந்து ஆநந்த மநுபவிக்கக் கருதி விரைந்து அச்சேர்த்தி அப்பொழுதே கிடைக்காது விளம்பித்தலால் வருந்துகிற ஆழ்வார்க்கு அவ்வநுபவத்துக்கு ஏற்ற காலம் ஆற்றாமையை மிகுவித்துக்கொண்டு வந்தவளவிலே ஸம்ஸாரத்தில் ஸுகஹேதுக்களான பொருள்களெல்லாம் பாதகங்களாய்த் தோன்றி மேன்மேலும் வருத்துகிற தன்மையைக் கண்டு அவ்வாழ்வார் இரங்கிக் கூறும் வார்த்தை இதற்கு ஸ்வாபதேசம். அப்பெருமானைப் பிரிந்த நிலைமையில் அவனைச் சேர்தற்கு உரியகாலம் நெருங்கினால் ஒரு சிறிது ஞானமே மிச்சமாம்படி மிக்க விளக்கமுடைய விவேகம் குலைந்து பரதத்தராயிருப்பார்க்கு ஆற்றாமை மிகுமென்பது ‘பால்வாய் பிறைப்பிள்ளை யொக்கலைக்கொண்டு பகலிழந்த மேற்பால் திசைப்பெண் புலம்புறுமால் ‘என்பதனால் தோன்றும். பால்வாய் பிறைப்பிள்ளை- ஞானத்தின் சிறுபகுதி. பகலிழத்தல்- விவேகங் குலைதல் மேல்போல் திசைப்பெண்- ஆற்றாமைமிகுதல். மாலை- உரியகாலம். பின்னிரண்டடி- கைலப் பிரபஞ்சங்களையும் தனக்கே உரியபொருளாகவுடைய தலைவனான எம்பெருமானுடைய யோக்யதையிலே யீடுபட்டார்க்கு அப்பெருமானுடைய அநுபவம் கிடைக்காமையினால் வந்த ஆற்றாமைக்கு மேலே ‘ம்ஸார பதார்த்தங்களும் பாதகமாய் வருத்தஞ் செய்யுமென்றவாறு. ‘உலகளந்தமால்’ என்றதனால் அவரவர்கள் வேண்டாதிருக்கையிலும், எல்லாப் பிராணிகளின் தலையிலும் திருவடிகளைத் தானே கொண்டு வந்து வைத்து அவற்றைத் தன் உடைமையாக ஆட்கொண்டவன் வேண்டுகின்ற என்னை ஆட்கொள்ளா தொழிவதே! என்று ஈடுபட்டபடி.
‘மனமுடையார்க்கு’ என்று படர்க்கையாகக் கூறினதைக் கொண்டு இப்பாசரத்தைத் தோழி வார்த்தையாகவும் தாய் வார்த்தையாகவும் கொள்வாருமுண்டு. அப்பொழுது ஆழ்வார் நிலையைக் கண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் அஞ்சுதல் ஸ்வாபதேசார்த்தமாகக்கொள்ளத் தகும்.
English Translation
The Plunderer evening has killed the valiant day, whose young wife west stands wailing with the milk-dribbling child Moon on her waist. His vassal the cool breeze goes on a rampage, taking all that is left of those who desire the Tulasi-garland of the Earth-measuring lord!
