எட்டாந் திருமொழி
(3198)
முடியானே மூவுலகும் தொழுதேத் தும்சீர்
அடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய் புள்ளூர்
கொடியானே, கொண்டல்வண் ணா அண்டத் தும்பரில்
நெடியானே, என்று கிடக்குமென் நெஞ்சமே.
(3199)
நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென்
தஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற
நஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய வஞ்சனே,
என்னுமெப் போதுமென் வாசகமே.
(3200)
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்
நாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து,
வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்
தாயவனே, என்று தடவுமென் கைகளே.
(3201)
கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,
வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,
பைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை
மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே.
(3202)
கண்களால் காண வருங்கொலைன் றாசையால்,
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்,
பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து,
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே.
(3203)
செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று,
புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன் னையே
அவிவின்றி யாதரிக் கும்என தாவியே.
(3204)
ஆவியே. ஆரமுதே என்னை ஆளுடை,
தூவியம் புள்ளுடை யாய்! சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும்,
கூவியும் காணப் பெறேனுன கோலமே.
(3205)
கோலமே தாமரைக் கண்ணதோர் அஞ்சன
நீலமே,நின்றென தாவியை யீர்கின்ற சீலமே,
சென்றுசொல் லாதன முன்நிலாம் காலமே,
உன்னையெந் நாள்கண்டு கொள்வனே?
(3206)
கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓராயிரம் தோள்துணித்த
புள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே?
(3207)
பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்
பெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று,
வருந்திநான் வாசக மாலை¦ காண்டு உன்னையே
இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே.
(3208)
புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை,
நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல்
வலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்ப்பத்து,
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே.
