ஒன்பதாந் திருமொழி
(3319)
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை?,
கண்ணாளா கடல்கடைந்தாய் உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவா தடியேனைப் பணிகண்டாய் சாமாறே.
(3320)
சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.
(3321)
கொண்டாட்டும் குலம்புனைவும் தமருற்றார் விழுநிதியும்,
வண்டார்பூங் குழலாளும் மனையொழிய வுயிர்மாய்தல்,
கண்டாற்றேன் உலகியற்கை கடல்வண்ணா அடியேனைப்
பண்டேபோல் கருதாதுன் அடிக்கேகூய்ப் பணிகொள்ளே.
(3322)
கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக,
கொள்ளென்று தமம்மூடும் இவையென்ன உலகியற்கை?
வள்ளலே மணிவண்ணா உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல்செய் தடியேனை உனதருளால் வாங்காயே.
(3323)
வாங்குநீர் மலருலகில் நிற்பனவுமீ திரிவனவும்,
ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்,
ஈங்கிதன்மேல் வெந்நரகம் இவையென்ன உலகியற்கை?
வாங்கெனைநீ மணிவண்ணா. அடியேனை மறுக்கேலே.
(3324)
மறுக்கிவல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்,
அறப்பொருளை யறிந்தோரார் இவையென்ன உலகியற்கை?
வெறித்துளவ முடியானே வினையேனை யுனக்கடிமை
அறக்கொண்டாய், இனியென்னா ரமுதே.கூய் அருளாயே.
(3325)
ஆயேயிவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால்,
நோயேமூப் பிறப்பிறப்புப் பிணியேயென் றிவையொழியக்,
கூயேகொள் அடியேனைக் கொடுவுலகம் காட்டேலே.
(3326)
காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால்,
ஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்,
கோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து,
கூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே?
(3327)
கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும் தொழாவகை செய்து,
ஆட்டுதிநீ யரவணையாய். அடியேனும் அஃதறிவன்,
வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் திருவடியே சுமந்துழல,
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே.
(3328)
கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்,
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே.
(3329)
திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை,
திருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்,
திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்,
திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே.
