முதல் திருமொழி
(1848)
ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள்
வருநல் தொல்கதி யாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய்
கருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே.
(1849)
பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
றன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே.
(1850)
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய் மாலை
ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே.
(1851)
துளக்க மில்சுட ரை,அவு ணனுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்
அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே.
(1852)
சுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர்
நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என்
உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண்
விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே.
(1853)
வானை ஆரமு தம்தந்த வள்ளலை
தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய்
ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம்
கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே.
(1854)
கூந்த லார்மகிழ் கோவல னாய் வெண்ணெய்
மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே.
(1855)
பத்த ராவியைப் பான்மதி யை,அணித்
தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்
முத்தி னைமணி யைமணி மாணிக்க
வித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே.
(1856)
கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்
கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை
கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்
நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே.
(1857)
பெற்றம் ஆளியை பேரில் மணாளனை
கற்ற நூல்கலி கன்றி யுரைசெய்த
சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே.
