முதல் திருமொழி
(1748)
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளர வினணை மேவி
சங்கமா ரங்கைத் தடமல ருந்திச் சாமமா மேனியென் தலைவன்
அங்கமா றைந்து வேள்விநால் வேதம் அருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
(1749)
கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக் கராம்கொளக் கலங்கியுள் நினைந்து
துவளமேல் வந்து தோன்றிவன் முதலை துணிபடச் சுடுபடை துரந்தோன்
குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தலொண் கழனி
திவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
(1750)
வாதைவந் தடர வானமும் நிலனும் மலைகளும் அலைகடல் குளிப்ப
மீதுகொண் டுகளும் மீனுரு வாகி விரிபுனல் வரியகட் டொளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புதுவிரை மதுமல ரணைந்து சீதவொண்
தென்றல் திசைதொறும் கமழும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
(1751)
வென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி வெள்ளெயிற் றொள்ளெரித் தறுகண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத்து உயர்கொடி யொளிவளர் மதியம்,
சென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
(1752)
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னுமே ழுலகும் ஈரடி யாகப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத் தலைபுன லிலைக்குடை நீழல்
செந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
(1753)
மழுவினால் அவனி அரசைமூ வெழுகால் மணிமுடி பொடிபடுத்து உதிரக்
குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம் தவிர்ந்தவன், குலைமலி கதலிக்
குழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும் குளிர்தரு சூதம்மா தவியும்
செழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
(1754)
வானுளா ரவரை வலிமையால் நலியும் மலிகடல் இலங்கையார் கோனை
பானுசேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிரவில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக் கணமுகில் முரசநின் றதிர
தேனுலா வரிவண் டின்னிசை முரலும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
(1755)
அரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தை அஞ்சிடா தேயிட, அதற்குப்
பெரியமா மேனி யண்டமூ டுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்
வரையின்மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
திரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும் திருக்கண்ணங் குடியுள் நின் றானே.
(1756)
பன்னிய பாரம் பார்மகட் கொழியப் பாரத மாபெரும் போரில்
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர் மைத்துனர்க் குய்த்தமா மாயன்
துன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
(1757)
கலையுலாவல்குல் காரிகை திறத்துக் கடல்பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற திருக்கண்ணங் குடியுள்நின் றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்
உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும் வல்லவர்க் கில்லைநல் குரவே.
