பத்தாந் திருமொழி
(1538)
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழ லாயுலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி எறிஞர் அரணழிய
கடந்த நம்பி கடியா ரிலங்கை உலகை யீரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
(1539)
விடந்தா னுடைய அரவம் வெருவச் செருவில் முனநாள்,முன்
தடந்தா மரைநீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழ லாகி உலகை யீரடியால்
நடந்தா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
(1540)
பூணா தனலும் தறுகண் வேழம் மறுக வளைமருப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திருமார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர்வெண்ணெய்
நாணா துண்டான் நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
(1541)
கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்,
எல்லா வுலகும் வணங்க விருந்த அம்மான், இலங்கைக்கோன்
வல்லா ளாகம் வில்லால் முனிந்த எந்தை, விபீடணற்கு
நல்லா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
(1542)
குடையா வரையால் நிரைமுன் காத்த பெருமான் மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம்
நடையா வுண்ணக் கண்டான் நாமம் நமோநா ராயணமே!
(1543)
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடலரக்கர்
மான மழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கென்றும்
தேனும் பாலும் அமுது மாய திருமால் திருநாமம்
நானும் சொன்னேன் நமரு முரைமின் நமோநா ராயணமே!
(1544)
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையு மிருநிலனும்
ஒன்று மொழியா வண்ண மெண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா வெடுத்த அடிக ளுடைய திருநாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் நமோநா ராயணமே!
(1545)
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே யெமக்கென்று
படுங்கால் நீயே சரணென் றாயர் அஞ்ச அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோநா ராயணமே.
(1546)
பொங்கு புணரிக் கடல்சூ ழாடை நிலமா மகள்மலர்மா
மங்கை பிரமன் சிவனிந் திரன்வா னவர்நா யகராய்
எங்க ளடிக ளிமையோர் தலைவ ருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோநா ராயணமே.
(1547)
வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலிய னொலிமாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே.
