(2645)
இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்
மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.
(2646)
மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்
வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்
மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான்,நங்கள்
பிணிக்காம் பெருமருந்து பின்.
(2647)
பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,
வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று
திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,
பருச்செவியு மீர்ந்த பரன்.
(2648)
பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,
உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்
றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்
கைதான் தொழாவே கலந்து.
(2649)
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்
தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.
(2650)
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,
மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட
வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே!
அறிகண்டாய் சொன்னேன் அது.
(2651)
அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்*
அதுவோர் பொருளில்லை யன்றே? *- அதுவொழிந்து
மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே! *
கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.
(2652)
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,
புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
அடியேன துள்ளத் தகம்.
(2653)
அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,
முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?
(2654)
அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,
சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே இனி
