(2653)

(2653)

அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,

முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்

சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,

ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?

 

பதவுரை

வல்வினையர் ஆவார்

கடுமையான பாவங்களானவை

(தங்களுடைய குடியிருப்பை யிழந்தமையாலே)

அகம் சிவந்த கண்ணினர் ஆய்

(கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையுடையனவாய்

முக்கி

வருந்தி

முகம் சிதைவராம் அன்றே

முகம் வாடியிருக்கின்றனவல்லவோ?

மிகும்

எல்லாரிலும் மேற்பட்டவனான

திருமால்

திருமாலினுடைய

சீர் கடலை

கல்யாண குணங்களாகிற கடலை

உள் பொதிந்த

உள்ளே அடக்கிக் கொண்ட

சிந்தனையேன் தன்னை

சிந்தனையை யுடையேனான என்னை

செவ்வே

செவ்வையாக

அடர்ந்து

நெருக்கி

ஆர்க்கு அடல் ஆம்

யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அகஞ்சிவந்த கண்ணினராய்) இப்படி என்னுள்ளே மிகவும் அபிநிவேசத்தைப் பண்ணிக் கலந்து வாழ்கின்ற திருமாலின் திருக்குணங்களை அநுஸந்திக்கப் பெறுகையாகிற ஏற்றமுடைய என்னை ஒருவராலும் திரஸ்கரிக்க முடியாதென்று மகிழ்ச்சியின் கனத்தாலே மார்பு தட்டிப் பேசுகிறார் போலேயிருக்கிறது இப்பாசுரம்.

இதற்கு முன்பு என்னை மிகவும் வருத்தின கொடிய கருமங்கள் இப்போது முன்பு போலே தனிக்கோல் செலுத்தி நலிய முடியாமையா லுண்டான சீற்றத்தாலே கண்கள் குதறிப்போய், “இதற்கு முன்பு செருக்கராய்த் திரிந்தநாமோ இப்போது இப்படி பரிபவப்படநின்றோம்” என்று வாய்விட்டுக் கதறவும் கதறாதிருக்கவும் மாட்டாமல் ஊமைகள் உளறுமாபோல உளறிக் கொண்டு முகபங்கமடைகிறபடியைக் காணுங்கொள் என்கிறார் முன்னடிகளில், அசேதநங்களான கருமங்களை “வல்வினையராவார்” என உயர்திணைபோலக் கூறுவதும், அவற்றுக்குக் கண்ணும் முகமும் உள்ளனபோலக் கூறுவதும், ஆழ்வாருடைய தற்போதைய மகிழ்ச்சியினாலாய கற்பனைகளென்க. முக்குதல்- வாய்விட்டுச் சொல்லமாட்டாமையும் வெறுமனிருக்கமாட்டாமையும்.

இனிமேல் எப்படிப்பட்ட கருமங்களும் தம்மை அடர்க்கமாட்டாவென்பதையும் அதன் காரணத்தையும் பின்னடிகளிற் பேசுகிறார். மிகும் திருமால் = மிகச் சிறிய என்னுள்ளே வந்திருக்கச் செய்தேயும் விசாலமான விடங்களிற்போல உடல் பூரிக்கின்ற திருமால் என்னவுமாம். சீர்க்கடலை உள்போதித்தலாவது- அப்பெருமானது அளவற்ற திருக்குணங்களை இடைவிடாது அநுஸந்தித்தல். பகவத்குணாநுபவம் பண்ணப்பெற்ற யான் இனி யார்க்கும் சளைக்கமாட்டேன்; ஒன்றையும் பொருட்படுத்தாமல் எனது காரியமே கண்ணாயிருப்பேன் என்றாராயிற்று.

 

English Translation

My terrible karmas have become red in their eyes and strained; they have lost their faces.  The stronger Tirumal, -Ocean of goodness, -has entered my heart, Now who can oppress me?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top