(2654)

(2654)

அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,

சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்

மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே

யாதாகில் யாதே இனி?

 

பதவுரை

அடர்பொன் முடியானை

அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும்

ஆயிரம் பேரானை

ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும்

சுடர்கொள் சுடர் ஆர்யானை

(சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை.

இடர் கடியும் மாதா பிது ஆக

துக்கங்களைப் போக்கவல்லதாயும் தந்தையுமாக

எனது உள்ளே வைத்தேன்

என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;

இனி

இனிமேல்

யாது ஆகில் யாதே

(எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அடர்பொன்முடியானை.) வல்வினைகள் இனிமேல் என்னை அடர்க்கதில்லா என்றார் கீழ்ப்பாட்டில். இனி அந்த வல்வினைகள் என்னை என்ன செய்தாலும் எனக்கு வருவதொரு கெடுதியில்லையென்கிறாரிதில். எம்பெருமானே ஸகலவித பந்துவுமாவன் என்று உறுதியான அத்யவஸாயம் கொண்டேனான பின்பு இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை யென்கிறார். இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே; பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்; சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள். ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ? பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும் தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ? பகவத் குணங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதற்குப் புறம்பான லாப நஷ்டங்களொன்றும் கணிசிக்கப்பட மாட்டாவாகையாலே ஆழ்வாரும்  “யாதாசில் பாநேயினி” என்று மிடுக்குத் தோற்றமொழிகின்றார்.

அடர்பொன் முடியானை = இங்குத் திருவபிஷேகத்தை மாத்திரம் சொல்லி யிருப்பது “செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர் திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும், தாளநன்மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும், மங்கல வைம்படையுந் தோள்வளையும் குழையும் மக்கரமும் வாளிகளும் சுட்டியும்” (பெரியாழ்வார் திருமொழி 1-5-10) என்கிற மற்றுமுள்ள திவ்ய பூஷணங்கள் பலவற்றுக்கும் உபலக்ஷணமென்க. “பலபலவேயாபரணம் பேரும் பலபலவே” என்றபடி எம்பெருமானுடைய விலக்ஷணமான திருவாபரணங்களையும் திருநாமங்களையும் திவ்யாயுதங்களையும் சிந்திக்கப் புகுந்தால் இதர விஷயங்களைப் பற்றின லாப நஷ்டங்கள் ஒரு பொருளாக நெஞ்சிற்படுமோ என்பது உள்ளுறை.

சுடர்கொள் சுடராழி = உலகில் சந்திரன் ஸூர்யன் நக்ஷத்திரங்கள் அக்நி முதலிய சுடர்ப் பொருள்கள் எத்தனையுண்டோ அவையெல்லாவற்றினுடையவும் தேஜஸ்ஸைக் கவர்கின்ற ஆழி; திருவாழியின் முன்னே அவையெல்லாம் இருள் மூடினாற்போலே கிடக்குமென்றபடி. =பாநோ! பா நோ த்வதீய ஸ்புருதி” என்ற (13) ஸுநர்சநசதக ச்லோகத்தில் இது விரித்துரைக்கப்பட்டது.

மாதாபிதுவாக = “மாதா பிதாவாக” என்றிருக்க வேணுமென்று சிலர் பாடத்தைத் திருத்துவார்கள்; அதுவேண்டா; வடமொழியில் பிதா என்னும் பதத்தின் பகுதியான பித்ரு என்பதை இங்கே பிது எனப் பிரயோகித்துள்ளார்.

 

English Translation

The Lord with a golden crown, the Lord with a thousand names, the Lord who wields a radiant discus, is my mother and my father, I have him inside me; he ends my desparir. Now come what my, what can happen?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top