(2655)

(2655)

இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,

தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர்

அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு

முகத்தான்நின் உந்தி முதல்.

 

பதவுரை

தனி நின்ற

தானொருவனுமே காரணமாய் நின்றவனும்

சார்வு இலா

வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான

மூர்த்தி

எம்பெருமானே!

அகத்து பனி நீர் உலவு செம்சடையான்

உள்ளே குளிர்ந்த சங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன்.

ஆகத்தான்

உன் திருமேனியை அச்ரயித்து வாழ்பவன்;

நான்கு முகத்தான்

நான்முகக் கடவுள்

நின் உந்தி முதல்

உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்;

இனி

இப்படியான பின்பு

நின் பெருமை

உனது மேன்மையை

யான் நின்று உரைப்பது என்னே

தான் முயன்று சொல்வது எங்ஙனே?

(என்னால் சொல்லப்போகாதென்கை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இனி நின்று நின்பெருமை) எம்பெருமானையே எல்லவுறவுமாகப் பற்றினேனென்றார் கீழ்ப்பாட்டில். இங்ஙனே பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகக் சொன்னீரே, என்னுடைய படிகளெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவீராகில் சிறிது சொல்லிக்காணும்’ என்ற; பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னாநிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.

தனி நின்ற சார்விலாமூர்த்தி  = காரியப் பொருள்கள் யாவும் அழிந்த காலத்து  ******  எகோ ஹவை நாராயண ஆஸீத்” (நாராயண னொருவனே இருந்தான்.) என்று உபநிஷத்தில் சொன்னபடியே தனியனாக இருந்தவனே என்கிறது= தனிநின்ற என்பதனால் அக்காலத்தில் கீழ்ப்பட்ட தெய்வங்களெல்லாம் மேற்பட்ட தெய்வங்களைச் சரணம்புக, எல்லாருமாக ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைச் சரணம் புகுந்து ஸத்தைபெற்றார்களென்று சொல்லிற்றே யொழிய, நாராயணன் மற்றொருவனைப்பற்றி ஸத்தை பெற்றதாகச் சொல்லாமையாலே சார்விலா மூர்த்தி என்றார்; நான் மற்றொரு தெய்வத்தைச் சாராதமூர்த்தி என்கை. மூர்த்தி-= அண்மைவிளி; ஸ்வாமியே! என்று விளித்தவாறு.

(பனிநீர் இத்யாதி.) கங்கையைச் சடையிலே கொண்ட சிவன் உன்னுடைய திருமேனியில் ஏகதேசத்தை இருப்பிடமாகக் கொண்டு ஸத்தை பெற்றான்; நான்முகனோ உனது நாபிக் கமலத்தில் நின்றும் பிறந்து ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவானான்; இப்படியிருக்க உனது பெருமையை புல்லியனான நான் பேசுவதென்று ஒன்றுண்டோ?- என்றாயிற்று.

ஆகத்தான் = ஆகமாவது சரீரம் ஒரு ஸமய விசேஷத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு எம்பெருமான் தனது திருமேனியின் ஒருபுறத்திலே இடம் கொடுத்து உதவினன் என்கிற இதைப் பெரிய குணமாகக் கொண்டு ஆழ்வார்கள் இதனை அடிக்கடி அருளிச்செய்வார்கள்; “ஏறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனியுடம்பன்” என்பர் திருவாய்மொழியிலும்; “அக்கும் புலியினதளுமுடையாரவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றார் பெரிய திருமொழியிலே திருமங்கையாழ்வார்.

நின்னுந்திமுதல் = அன்மொழித்தொகை; (பஹுரீஹிஸமாஸமடங்கியது) நின் உந்தியை முதற்காரணமாக வுடையவன் என்று பொருள்படுதலால். நின் உந்தியிலே பிறந்து உலகுக்கெல்லாம் முதற்காரணமாயிருப்பவன் என்றுரைத்தலுமாம்.

 

English Translation

Siva with Ganga in his mat-hair, occupies a corner in your person.  Brahma seated on a lotus has his origin in you.  O Lord with a frame that has neither a peer nor superior!  What can I say to praise your glory?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top