(2498)
சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்
கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே.
(2499)
கொம்பார் தழைகை சிறுநா ணெறிவிலம் வேட்டைகொண்டாட்
டம்பார் களிறு வினவுவ தையர்புள் ளூரும்கள்வர்
தம்பா ரகத்தென்று மாடா தனதம்மில் கூடாதன
வம்பார் வினாச்சொல்ல வோஎம்மை வைத்ததிவ் வான்புனத்தே?
(2500)
புனமோ புனத்தய லேவழி போகும் அருவினையேன்
மனமோ மகளிர்! நுங்காவல் சொல்லீர் புண்டரீகத்தங்கேழ்
வனமோ ரனையகண் ணான்கண்ணன் வானா டமரும்தெய்வத்
தினமோ ரனையீர்க ளாய்,இவை யோநும் இயல்புகளே?
(2501)
இயல்வா யினவஞ்ச நோய்கொண் டுலாவும், ஓரோகுடங்கைக்
கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள் தம்மொடும், குன்றமொன்றால்
புயல்வா யினநிரை காத்தபுள் ளூர்திகள் ளூரும்துழாய்க்
கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென் னாங்கொலெம் கோல்வளைக்கே?
(2502)
எங்கோல் வளைமுத லாகண்ணன் மண்ணும்விண் ணும்அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்கும் மால்திறல் சேரமர்
தங்கோ னுடையதங் கோனும்ப ரெல்லா யவர்க்கும்தங்கோள்
நங்கோ னுகக்கும் துழாய்எஞ்செய் யாதினி நானிலத்தே?
(2503)
நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை கடந்தபொன்னே!
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலதுஎப் பாலைக்கும் சேமத்ததே.
(2504)
சேமம்செங் கோனருளே,செருவாரும்நட் பாகுவரென்
றேமம் பெறவையம் சொல்லும்மெய் யே,பண்டெல் லாம்மறைகூய்
யமங்க டோறெரி வீசும்நங் கண்ணனந் தண்ணந்துழாய்த்
தாமம் புனைய,அவ் வாடையீ தோவந்து தண்ணென்றதே.
(2505)
தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம்- நடுவே
வண்ணம் துழாவியோர் வாடை யுலாவும்- வள்வாயலகால்
புள்நந் துழாமே பொருநீர்த் திருவரங் கா! அருளாய்
எண்ணந் துழாவு மிடத்துஉள வோபண்டும் இன்னன்னவே?
(2506)
இன்னன்ன தூதெம்மை ஆளற்றப் பட்டிரந் தாளிவளென்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய்வரும், நீலமுண்ட
மின்னன்ன மேனிப் பெருமா னுலகில்பெண் தூதுசெல்லா
அன்னன்ன நீர்மைகொ லோகுடிச் சீர்மையி லன்னங்களே.
(2507)
அன்னம்செல் வீரும்வண் டானம்செல் வீரும் தொழுதிரந்தேன்
முன்னம்செல் வீர்கள் மறவேல்மி னோகண்ணன் வைகுந்தனோ
டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச் சொல்லி அவரிடைநீர்
இன்னஞ்செல் லீரோ இதுவோ தகவென் றிசைமின்களே .