(2501)

(2501)

இயல்வா யினவஞ்ச நோய்கொண் டுலாவும், ஓரோகுடங்கைக்

கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள் தம்மொடும், குன்றமொன்றால்

புயல்வா யினநிரை காத்தபுள் ளூர்திகள் ளூரும்துழாய்க்

கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென் னாங்கொலெம் கோல்வளைக்கே?

பதவுரை

இயல்பு ஆயின

இயற்கையானதும்
வஞ்சம்

பிறரறியாதபடியுள்ளதுமான
நோய்

காதல் நோயை
கொண்டு

உடையவையாய்
உலாவும்

(ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும்

ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கையளவாகவுள்ளவையும் கயல்மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப்பெருக்கையுடைய கண்களுடனும்
புயல் வாய்

(முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால்

கோவர்ததன மலையினால்
இனம் நிரைகாத்த

பசுக்கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி

கருடவாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய்

தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர்மேல்

பறிக்கப்படுதல் பொருந்தின பூவின்மேல் (ஆசைப்பட்டுச்சென்ற)
மனத்தொடு

மனத்தோடும்
எம் கோல் வளைக்கு

அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு

என் ஆம் கொல் = (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரிவாற்றாத தலைமகளின் ஈடுபாட்டைக் கண்ட செவிலித்தாய் இரங்கிக் கூறுதல் இது. எனது மகள் கண்கலக்க முற்றாள்; நெஞ்சும் அழியப்பெற்றாள்; இவ்வளவுக்கு மேலும் இனி ஏதாய் முடியுமோ வென அஞ்சியுரைக்கின்றாள். இம்மகளது கண்களோ வென்னில், ஸ்வாபாவிகமாயும் பிறர் தெரிந்து கொள்ள வொண்ணாதபடி யிருப்பதாயுமுள்ள காதல்நோயை யுடையவையாய் ஆற்றாமை மிகுதியால் எங்கும் பரந்து பார்க்கின்றவையாய்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு அகங்கையளவாக உள்ளவையாய், கயல்மீன்போலப் பிறழ்வனவாய் மிக்க நீர்ப்பெருக்கையுடையனவாயிருக்கின்றன; இவளது மனமோவென்னில், *குன்றமேந்திக் குளிர் மழைகாத்தவனும் கருடவாஹநனுமான கண்ணபிரானது தேன்பெருகுந் திருத்துழாய் மலரின் மேல் ஆசைப்பட்டுச் சென்றது; இனிமேலும் என்ன நிலைமை நேரும்? என்று கவல்கின்றாளாயிற்று. ‘இயல்வாயின வஞ்ச நோய் கொண்டுலாவு மெங்கோல் வளைக்கு’ என்று அந்வயித்தலுமாம். உடம்பு மெலிதலால் கைவளை கழலும்படியான நிலைமை நேருமோவென்று வளைக்குக் கவலைப்பட்டமை தோன்ற ‘கோல்வளைக்கு’ எனப்பட்டது. அழகிய வளையல்களையுடைய இவளுக்கு என்றபடி. ‘கோலம்’ என்ற சொல் ‘கோல்’ என விகாரப்பட்டது; ‘நீள்’ என்பதுபோல.

“வாயிற் பல்லு மெபந்தில் மயிலும் முடி கூடிற்றில…. மாயன் மாமணி வண்ணன்மே லிவண் மாலுறுகின்றாளே” என்னும்படி இவள் மிக்க இளைமை தொடங்கிக் கண்ணபிரானிடம் காதல் கொண்டமை தோன்ற ‘இயல்வாயின நோய்” என்றாள். இப்பிரபந்தத்தில் அறுபதாம் பாசுரமுங்காண்க. ‘வஞ்ச நோய்’ என்பதற்கு- நாயகன் பிரிந்து சென்று வாராது வஞ்சித்ததனாலாகிய வருத்தமென்று முரைக்கலாம். அன்றி, வஞ்ச நோய் கொள்ளுதல்- பிறரைப் பார்வையழகால் வசப்படுத்தி வருத்தந் தன்மையைக் கொள்ளுதலுமாம். கண்களின் பருத்து நீண்ட வடிவத்துக்குக் கயல் உவமை. ‘கயல் பெரு நீர் பாய்வு அன கண்கள்’ என்று அந்ஸயித்து, கயல்மீன் மிக்க நீர்பெருக்கிலே பாய்தல் போலக் கண்ணில் வெள்ளத்திற் புரளுகிற கண்கள் என்று உரைத்தலுமொன்று.

புயல்வாய்- வாய்-ஏழனுருபு: மழை பெய்த காலத்திலே என்க. புள்ளூர்கோல்வளை- பண்புத்தொகை யன்மொழிகள். ஊரப்படுவது ஊர்தி.

கொயல் – தொழிற்பெயர்; கொய்தல் என்றபடி. கொய்தல் வாய்த்தமலர் என்றது- கொய்யப்பட்ட மலர் என்றபடி.

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருள்:- எம்பெருமானைச் சேரப் பெறாது வருந்துகிற ஆழ்வாரது தன்மையை நோக்கின ஞானிகளின் வார்த்தை இது. இயல்வாயின – செயற்கையாகவன்றி “அறியாக் காலத்துள்ளே அடிமைக்க ணன்பு செய்வித்து அறியா மாமாயத்தடியேனை வைத்தாயால்” என்னும்படி இயற்கையாக வுள்ளதுலை; வஞ்சம் – தன்னாலன்றிப் பிரறால் அறியப்படாததுமான,நோய்- ஆற்றாமைத்துயரை வினைக்கிற பக்தி மிகுதியை,கொண்டு- உடையவைப்பார் உலாவும்- ஒரு நிலை நில்லாமல் தடுமாறுகிற, ஒரோ குடங்கைக் கயல் பாய்வன பெருநீர்க் கண்கள்தம்மொடும்- அகங்கைகளால் மொண்டு எடுத்து அநுபவிக்கும்படி அழகிய நிலைமையையுடையவையாய் ஆற்றாமையாலாகிய தண்ணீர் வெள்ளத்திலே அலைபடுகிற ஞான வகைகளோடும், கண்களோடும், குன்றமொன்றால்  மனத்தோடு- சரணாகத் ரக்ஷணத்தின் பொருட்டு அருந்தொழில் செய்பவனும் பசுப்ராயமான ப்ராணிகளைப் பாதுகாப்பவனும் மிக்க விரைவையுடையவனுமான எம்பெருமானது மிக இனிய திருத்துழாய் மாலையழகை அநுபவிப்பதில் ஆழ்ந்த மனத்தோடும் (கூடிய) எம்கோல்வளைக்கு- எமக்கு மிக இஷ்டரான இவர்க்கு, என் ஆம் கொல் – இன்னும் யாது நிலைமை நேர்ந்திடுமோ?

English Translation

My bangled daughter has fallen prey to a deadly disease. She doles out fears by the handful, from fish-like eyes that would fill her palms. Alas! What is going to happen to her, and to her heart which craves for the nectar-laden flowers of the Tulasi wreath worn by the bird-rider Lord who protected his cows against a rain with a mount?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top